கொள்ளிடம் ஆற்றில் பெண் கொன்று புதைப்பு.. எலும்பு துண்டுகளை நாய்கள் குதறியதால் அம்பலம்
ஆற்றுமணலில் புதைக்கப்பட்ட பெண்ணின் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவையாறு: திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்று மணலில் இளம்பெண் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொள்ளிடம் ஆற்றில் தென்கரையிலிருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், அருகில் சென்று பார்த்தனர். அப்போது சில நாய்கள் குழி தோண்டி எலும்பு துண்டுகளை கவ்வி சென்று கொண்டிருந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இதுகுறித்து மரூர் காவல்துறையினருக்கு புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், அங்கு நாய்கள் கடித்து குதறிய நிலையில் கிடந்த ஒரு பெண்ணின் சடலம் மண்ணில் கிடந்ததுடன், பெண்ணின் கை, கால் போன்றவற்றின் எலும்புகள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ந்தனர்.
அவற்றினை மீட்டு பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், பெண் அணிந்திருந்த புடவை, கைக்கடிகாரம் போன்றவற்றையும் போலீசார் மீட்டனர். கைக்கடிகாரம் இயங்கி கொண்டிருந்ததால் இச்சம்பவம் நடைபெற்று சில வாரங்களே ஆகியிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
புதைக்கப்பட்ட இடத்தில் மதுபாட்டில்கள் மற்றும் கத்தி இருந்ததால், அப்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications