முக்கோணக் காதல்: மலையிலிருந்து நண்பரை தள்ளி கொலை செய்த இளைஞர் கைது
தேனி: முக்கோணக் காதல் விவகாரத்தில் நண்பரை மலை உச்சியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த கேரள இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் அணைக்கரை பகுதியைச் சேர்ந்த வீரணன் மகன் ராஜேஷ் கண்ணன் (20). இவரை கடந்த ஜூலை 3-ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து வீரணன் கொடுத்த புகாரின்பேரில் வண்டன் மேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் ராஜேஷ் கண்ணனின் நண்பரான ஜோன் (20) என்பவர் அவரை கடத்தி சென்றதாக விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து ஜோனை பிடித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அவர் போலீஸாரிடம் கூறிய வாக்குமூலம்: எனது உறவினர் பெண்ணை நான் காதலித்தேன். அதே பெண்ணை ராஜேஷ்கண்ணணும் காதலித்து வந்தார். நான் கண்டித்தும் அவர் கேட்கவில்லை. இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.
சம்பவத்தன்று ராஜேஷ் கண்ணணை நைசாக பேசி தமிழக, கேரள எல்லையான சரங்கனாறு, வள்ளியகண்டம் மலை உச்சிக்கு அழைத்து சென்றேன். அங்கு அவரை மது குடிக்க வைத்தேன். போதை தலைக்கேறியதும் ராஜேஷ் கண்ணனை மலை உச்சியிலிருந்து தள்ளி விட்டு கொலை செய்தேன் எனத் தெரிவித்தார்.
அவர் கொலை செய்யப்பட்ட இடம் தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பகுதி என்பதால், கேரளா மாநில போலீஸார் ஞாயிற்றுக்கிழமை லோயர்கேம்புக்கு வந்தனர்.
பின்னர் உள்ளூர் போலீஸார் உதவியுடன் சிதைந்து கிடந்த ராஜேஷ்கண்ணன் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முக்கோணக் காதலால் நண்பரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.