பிரச்சினைன்னு வந்துட்டா.. ராகேஷ் கடகடன்னு டவரில் ஏறி விடுவார்!
செல்போன் டவரில் ஏறி அமமுக தொண்டர் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
சென்னை: எத்தனையோ தீவிர தொண்டர்களில் இந்த தொண்டர் ஒரு தனி ரகம்!
சென்னையில் ஆர்.ஏ. புரம் என்ற இடத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் பின்புறம் உள்ள செல்போன் டவரில் ஒரு இளைஞர் வேகவேகமாக ஏறினார். கண்ணிமைக்கும் நேரத்தில் கோபுரத்தின் உச்சிக்கே போய் நின்று கொண்டார். அவர் கையில் அமமுக கொடி இருந்தது. பிறகு டிடிவியின் தொடர் உண்ணாவிரத போராட்டம் என்று செல்போன் எண்கள் எழுதப்பட்ட பேனரும் கையில் இருந்தது.
போலீசாருக்கு தகவல்
கையில் கொடியுடன் ஏறும்போதே அதனை பார்த்த சிலர், ஏறவேண்டாம், கீழே இறங்குமாறு சொல்லியுள்ளனர். ஆனால் இளைஞர் எதையும் காதில் வாங்கவில்லை. இதனால் பதறிப்போன பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். சற்று நேரத்தில் போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்துக்கு வந்துவிட்டனர்.
மிரட்டிய ராகேஷ்
எல்லோருமே சேர்ந்து இளைஞரை கீழே இறங்கி வரும்படி வலியுறுத்தினர். ஆனால், அந்த இளைஞரோ, "18 எம்எல்ஏக்கள் கேசில் உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும், அப்புறம், பேரறிவாளன் உட்பட 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இது ரெண்டு விஷயத்துக்கும் உறுதி கொடுத்தால்தான் கீழே இறங்குவேன். அப்படி உறுதி தரவில்லையானால் கீழே குதித்த தற்கொலை செய்து கொள்வேன்" என்று மிரட்டினார்.
கீழே இறக்கினர்
இதனால் மிரண்ட காவல்துறையினரும், தீயணைப்பு துறையினரும், இளைஞருடன் அமைதியாக பேசி சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் இளைஞர் அதற்கு ஒத்து கொள்ளவே இல்லை. இதனால் செய்தவறியாது திகைத்த தீயணைப்பு துறையினர், டவரில் ஏறி இளைஞர் அருகிலேயே சென்று பேச்சுவார்த்தை நடத்தி, பின்னர் அவரை மெதுவாக கையை பிடித்து கீழே கூட்டி வந்தனர்.
எப்பவுமே இதே பாணி
முதல்வேலையாக அவரை கைது செய்த போலீசா, விசாரணையையும் துவக்கினர். அதில், இளைஞரின் பெயர் ராகேஷ் என்பதும் வயது 26 என்பதும் தெரியவந்தது. ராயபுரம் பகுதியை இந்த ராகேஷ், அமமுகவை சேர்ந்தவர் என்றும் தெரிந்தது. அது மட்டும் அல்லாமல் சமூகத்தை பாதிக்கக் கூடிய எந்த பிரச்சனை என்றாலும் இப்படித்தான் டவர் மீது ஏறிக் கொண்டு போராடுவாராம். போன 2017, அக்டோபரில் நடந்த நீட் தேர்வை கண்டித்து செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியவர்தான். ஆனால் அது பட்டினப்பாக்கம் செல்போன் டவராம்!