'லைசென்ஸ்' கேட்ட 'எஸ்.ஐ'யுடன் கட்டிப்புரண்டு நடு ரோட்டில் சண்டை போட்ட 'யூத்'....!
மரக்காணம்: லைசென்ஸ் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த வாலிபரை போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் தடுத்து நிறுத்தினார். இதையடுத்து அவருடன் அந்த வாலிபர் கட்டிப்புரண்டு நடு ரோட்டில் சண்டை போட்டதால் பரபரப்பாகி விட்டது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பஸ் நிலையம் அருகேதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
நேற்று மாலை பஸ் நிலையப் பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் கிஷோர் குமார் என்பவர் வாகனங்களில் வந்தவர்களிடம் லைசென்ஸ் இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு வாலிபர் படு வேகமாக பைக்கில் வந்துள்ளார். அவரை நிறுத்தி லைசென்ஸை எடுக்குமாறு கூறியுள்ளார் சப் இன்ஸ்பெக்டர். அதற்கு அந்த நபர் லைசென்ஸ் இல்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து பைக்கை தடுத்து நிறுத்தி போக விடாமல் நிறுத்தினார் சப் இன்ஸ்பெக்டர்.
இதையடுத்து அவருக்கும், வாலிபருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. இந்த நிலையில் திடீரென அந்த வாலிபர் கோபமடைந்து சப் இன்ஸ்பெக்டரை அடிக்க ஆரம்பித்தார். பதிலுக்கு சப் இன்ஸ்பெக்டரும் அடித்தார். இருவரும் சட்டையைப் பிடித்துக் கொண்டு கட்டிப் புரண்டு சண்டையில் இறங்கினர். இதனால் பஸ் நிலையப் பகுதியே பரபரப்பாகிப் போனது.
கூடுதல் போலீஸார் விரைந்து வந்து சண்டையை விலக்கி விட்டு அந்த நபரை காவல் நிலையத்திற்குத் தூக்கிச் சென்றனர். டிஎஸ்பி ராஜேந்திரன் விரைந்து வந்து விசாரணை நடத்தினார். அந்த நபர் என்ன ஆனார், அவர் மீது வழக்குப் போட்டார்களா, கைது செய்தார்களா, ஏன் சண்டை நடந்தது என்பது குறித்த விவரத்தை போலீஸ் தரப்பில் வெளியிடவில்லை.












Click it and Unblock the Notifications