திருப்பூரில் அரசு பேருந்து மோதி இளைஞர் பலி.. பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்!
பேருந்து மோதி இளைஞர் உயிரிழந்ததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video
திருப்பூர்: திருப்பூரில் இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் காங்கேயம் சாலை அமர்ஜோதி கார்டன் அருகில் குடும்பத்துடன் வசித்து வருபவர் கார்த்திக். இவர் திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் வேலை பார்த்து வந்தார்.
இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக கார்த்திக் தன்னுடைய இரண்டு சக்கர வாகனத்தில் வளம் பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, சேலத்திலிருந்து திருப்பூரை நோக்கி வந்த அரசு பேருந்து கார்த்தி வந்த இரு சக்கர வாகனத்தின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கார்த்தி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து கார்த்தியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய பேருந்தையும் அதன் ஓட்டுநர் முருகன் மற்றும் நடத்துநரையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்த பகுதியில் தொடர்ந்து பேருந்துகள், வேகமாக வருவதாகவும் விபத்துக்களை ஏற்படுத்துவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
தகவலறிந்து விரைந்து வந்த வடக்கு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகும்படி செய்தனர். இந்த போராட்டத்தின் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து தொடர்பாக வடக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.