பொறுப்பற்ற போலீஸ் செயலால் உயிரிழந்த வாலிபர்.. மாஜிஸ்திரேட் விசாரணை தொடங்கியது
சென்னை: சென்னையில் வேகமாக சென்ற வாலிபர்களை மடக்குவதற்காக பின்னால் உட்கார்ந்திருந்தவரை சட்டையைப் பிடித்து, அதனால் பைக் நிலை தடுமாறி போய் சாலைத் தடுப்புக் கம்பியில் விழுந்து, அது குத்தி வாலிபர் ஒருவர் பலியான விவகாரம் தொடர்பான மாஜிஸ்திரேட் விசாரணை தொடங்கியுள்ளது.
சென்னை மதுரவாயல் அருகே உள்ள நெற்குன்றம் மேட்டுக்குப்பத்தை சேர்ந்த செல்வம் (18) என்ற வாலிபர், நேற்று காலை, தனது நண்பர்கள் விக்னேஷ், ராஜா ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, போலீசார் விரட்டியதால், விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைப் பார்த்து ஆவேசமடைந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு இன்ஸ்பெக்டர் சற்குணம், தலைமைக் காவலர் சிவானந்தம் ஆகியோரை சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் போலீஸ் வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டது.

அசோக் நகரில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்ப்பதற்காக 3 பேரும் கே.கே.நகர். 80 அடி ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சற்குணம், தலைமைக் காவலர் சிவனாந்தம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஏட்டு சிவனாந்தம், அவர்களின் மோட்டார் சைக்கிளை மறித்துள்ளார். போலீசுக்கு பயந்து மோட்டார் சைக்கிளை ஓட்டிய ராஜா வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இன்ஸ்பெக்டர் சற்குணம், பின்னால் அமர்ந்திருந்த விக்னேசின் சட்டையை இழுத்து பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலை நடுவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலியில் போய் மோதியது. இதில் செல்வத்தின் வயிற்றில் கூர்மையான இரும்பு கம்பி பலமாக குத்தியது. இதனால் குடல் சரிந்த நிலையில் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மற்றும் செல்வத்தின் உறவினர்கள் இன்ஸ்பெக்டர் சற்குணம், சிவானந்தம் ஆகியோரை சரமாரியாக தாக்கினர். இதற்கிடையே அங்கு விரைந்து வந்த மற்ற போலீசார் இருவரையும் பொதுமக்களின் பிடியில் இருந்து மீட்டனர். போலீஸ் வாகனத்தை அடித்து நொறுக்கிய பொதுமக்கள் பல மணி நேரம் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து சைதாப்பேட்டை 23வது நடுவர் மன்ற மாஜிஸ்திரேட் ஜெயஸ்ரீ விசாரணையைத் தொடங்கியுள்ளார். முதலில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள செல்வத்தின் உடல் இன்று மாஜிஸ்திரேட் மேற்பார்வையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பலியான செல்வத்தின் உறவினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட போலீசாரிடமும் மாஜி்ஸ்திரேட் விசாரணை நடத்தினார்.
இதன் பின்னர், கே.கே.நகர் 80 அடி சாலையில் செல்வம் பலியான இடத்தில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் ஜெயஸ்ரீ விசாரணை நடத்தினார். அதேபோல அந்தப் பகுதியில் உள்ள கடைக்காரர்கள் மற்றும் விபத்து நடந்த போது அங்கிருந்தவர்கள் ஆகியோரிடமும் விசாரணை நடத்துகிறார் அவர்.
கம்பி மாற்றப்படுமா?
இதற்கிடையே சென்னை நகர சாலைகளில் நடுவே அமைக்கப்பட்டு தடுப்பு வேலிகளில் கூர்மையான கம்பிகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கூர்மையான அப்படிப்பட்ட ஒரு கம்பி குத்தித்தான் செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். எனவே கத்தி போல கூர்மையாக உள்ள இந்த கம்பிகளை அகற்றி விட்டு அதற்குப் பதில் கூர்மை இல்லாத பந்து போல மாற்றியமைக்க வேண்டும் என்று போலீஸாரும் மாநகராட்சியிடம் கூறியுள்ளனராம்.
இதுகுறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக செல்வம் உயிரிழந்த இடத்திலும் அவர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications