திருவள்ளூர் அருகே வாலிபர் வெட்டிக்கொலை .. உடல் முட்புதரில் வீச்சு
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வாலிபரை கொலை செய்து, உடலை பீப்பாயில் அடைத்து வீசியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூரை அடுத்த அரண்வாயல் அருகே முட்புதர் ஒன்றில் நேற்று காலை நீலநிற பிளாஸ்டிக் பீப்பாய் இருந்தது. அந்த பீப்பாயை நாய்களும், காகங்களும் சுற்றி சுற்றி வந்தன. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது, புதர் அருகே கிடந்த பீப்பாயை திறந்துபார்த்தனர். அதில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண்பிணம் அழுகிய நிலையில் வெட்டுக்காயங்களுடன் கிடந்தது. குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதற்காக அந்த பீப்பாயில் மிளகாய்த்தூள் தூவப்பட்டிருந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இ.டி.சாம்சன், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும், தொழில் போட்டி அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications