ஒரு கள்ளக்காதல்.. ஒரு கொலை.. சிறைக்குப் போன குடும்பம்.. சிதிலமாகிப் போன அமைதியான வாழ்க்கை!
சென்னை: சென்னையில் ஒரு கள்ளக்காதல் விவகாரத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். குடும்பமே சிறைக்குப் போய் விட்டது.
சென்னை வட பழனியைச் சேர்ந்தவர் 42 வயதான விஜயக்குமார். அச்சகம் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் கவுசல்யா. 40 வயதாகிறது. இவர்களுக்கு 22 வயதில் அபிஷேக், 17 வயதில் ஒரு மகன் என இரு மகன்கள் உள்ளனர்.
விஜயக்குமார், ராஜேஷ் என்ற 28 வயது நபரிடம் வட்டிக்குப் பணம் வாங்கியிருந்தார். இதுதொடர்பாக அடிக்கடி விஜயக்குமார் வீட்டுக்கு வந்து போனார் ராஜேஷ். அப்போது, அவருக்கும், விஜயக்குமாரின் மனைவிக்கும் இடையே தவறான நட்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி விட்டது. கள்ளக்காதல் கண்ணை மறைக்க ணவர், குழந்தைகளைப் பிரிந்து ராஜேஷுடன் போய் விட்டார் கவுசல்யா.
இதனால் கோபமடைந்தார் விஜயக்குமார். ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லை. இந்த நிலையில் விஜயக்குமார் வீட்டுக்கு அருகே நடந்த ஒரு விழாவுக்கு ராஜேஷ் வந்துள்ளார். அவரைப் பார்த்த கவுசல்யாவின் இரு மகன்களும் போய் தங்களது தாயார் குறித்து உருக்கமாக கேட்டுள்ளனர். ஆனால் ராஜேஷோ இரக்கமே இல்லாமல் இருவரையும் திட்டி விட்டுப் போய் விட்டார்.
வீடு திரும்பிய இருவரும் தங்களது தந்தையிடம் ராஜேஷ் திட்டியதைக் கூறியுள்ளனர். இதனால் கடும் கோபமடைந்த விஜயக்குமார், இருவரையும் மற்றும் உறவினர் சிவக்குமார் என்பவரையும் அழைத்துக் கொண்டு ராஜேஷ் வீட்டுக்கு விரைந்தார். அங்கு இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் வெடித்தது. அது பின்னர் கைகலப்பாக மாறியது. ராஜேஷுக்கு ஆதரவாக 33 வயது நாகேஸ்வர ராவ் உள்ளிட்ட சிலர் வந்தனர்.
இரு தரப்பும் கட்டை, கத்தியால் சரமாரியாக தாக்கிக் கொண்டதில் நாகேஸ்வர ராவுக்கு வெட்டு விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தவர். திருமணமாகி மனைவி, மகன், மகள் உள்ளனர்.
அதன் பின்னர் விஜயக்குமார் தரப்பு போலீஸில் சரமடைந்தது. அதேபோல ராஜேஷ், அவரது நண்பர் நாகராஜ் ஆகியோர் மீதும் போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
விஜயக்குமார், அவரது இரு மகன்கள், உறவினர் சிவக்குமார் ஆகியோர் மீது கொலை வழக்குப் போடப்படடுள்ளது. விஜயக்குமாரின் இரு மகன்களில் ஒருவர் மைனர் வயது என்பதால் அவரை கெல்லீஸில் உள்ள சிறார் சீர்திருத்த இல்லத்தில் சேர்த்துள்ளனர். மற்றவர்கள் புழல் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.