உடுமலைப்பேட்டை சங்கர் பாணியில் கரூர் அருகே இளைஞர் படுகொலை
கரூர்: கரூர் அருகே ஆரோக்கியசாமி என்ற 28 வயது இளைஞரை 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொன்றது. இவர் காதல் மணம் புரிந்தவர் என்று கூறப்படுகிறது. எனவே பெண் வீட்டுத் தரப்பினர்தான் இவரைக் கொன்றிருக்கக் கூடும் என்று பரபரப்பு எழுந்துள்ளது.
ராமகவுண்டன்புதூரை சேர்ந்தவர் சுரேஷ் ஆரோக்கிய சாமி (28). நேற்று இரவு இவர் கரூர்- ஈரோடு சாலையில் ஆத்தூர் பிரிவு அருகே டாஸ்மாக் பாரில் அமர்ந்து 2 நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது 4 பேர் 2 மோட்டார் சைக்கிளில் வந்து சரமாரியாக சுரேஷ் ஆரோக்கியசாமியை வெட்டித் தள்ளி விட்டுத் தப்பிஓடினர்.

பலத்த காயத்துடன் துடித்த ஆரோக்கியசாமியை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பாகவே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் ஒரு நபர் போலீஸ் நிலையத்துக்குப் போன் செய்து நான்தான் ஆரோக்கியசாமியை கொலை செய்ததாக கூறியுள்ளார். பின்னர் சில விவரங்களையும் அவர் போலீஸாரிடம் தெரிவித்தார். அந்த நபர் கூறுகையில், சுரேஷ் ஆரோக்கியசாமி எனது தங்கையை கடந்த வருடம் காதல் திருமணம் செய்து கொண்டார். அவர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் எனது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதையும் மீறி சுரேஷ் ஆரோக்கியசாமி எனது தங்கையை திருமணம் செய்து கொண்டார். அவர் மீதுள்ள ஆத்திரத்தில் கொலை செய்தேன் என்றும் கூறியுள்ளார்.
இந்த விவரம் உண்மைதான் என்று போலீ்ஸ் விசாரணையில் தெரிய வந்தது. சுரேஷ் ஆரோக்கியசாமிக்குத் திருமணம் நடந்ததும், பெண் வீட்டார் வந்து தங்களது பெண்ணைப் பிரித்து கூட்டிச் சென்று விட்டனர். இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஹேபியஸ் கார்பஸ் மனு போட்டார் ஆரோக்கியசாமி. அந்த வழக்கு விசாரணையின்போது அப்பெண்ணை போலீஸார் ஆஜர்படுத்தினர். ஆனால் அவரோ தனது பெற்றோருடனேயே இருப்பதாக கூறி விட்டார்.
இதனால் வேதனை அடைந்த ஆரோக்கியசாமி தனது மனைவியை மீட்டு வர தொடர்ந்து முயற்சித்து வந்தார். இந்த நிலையில்தான் நேற்று இரவு அவர் கொல்லப்பட்டு விட்டார்.
ஆரோக்கியசாமி கொலையில் ஈடுபட்டவர்கள் யார் யார், போனில் பேசிய நபர் எங்கே பதுங்கி இருக்கிறார், இது ஜாதி வெறிப் படுகொலையா என்பது உள்ளிட்டவை குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில்தான் உடுமலைப்பேட்டையில் சங்கர் என்ற தலித் வாலிபரை ஜாதி வெறிக் கும்பல் படுகொலை செய்தது. இதுதொடர்பாக அவரது மனைவி கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கரூரில் ஒரு ஜாதி வெறிக் கொலை நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications