விடிந்தால் மனைவிக்கு வளைகாப்பு... நள்ளிரவில் கணவர் தலை துண்டித்து படுகொலை!
நெல்லை: நெல்லையில் இன்று காலை மனைவிக்கு வளைகாப்பு நடக்கவிருந்த நிலையில், அவரது கணவர் நேற்று இரவு தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட வெறிச் செயல் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் மாரியப்பன். 24 வயதான இவர் சலவைத் தொழிலாளி ஆவார். இவரது மனைவி கர்ப்பமாக இருந்தார். அவருக்கு இன்று வளைகாப்பு நடக்கவிருந்தது. ஏற்பாடுகளும் நடந்து வந்தன. இந்த நிலையில் நேற்று இரவு சாப்பிட்டு விட்டு தனது வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார் மாரியப்பன். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது குடும்பத்தினர் தேடிப் பார்த்தும் மாரியப்பன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள வாய்க்கால் ஒன்றின் அருகே தலை துண்டித்த நிலையில் ஒரு வாலிபரின் பிணம் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று உடலை மீட்டனர். அது மாரியப்பன் என்று தெரிய வந்துள்ளது.
மாரியப்பனை அப்பகுதியைச் சேர்ந்த சிலர்தான் கொன்றிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது. மாரியப்பனுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இதில் மாரியப்பன் மீது கொலை முயற்சி வழக்கு போடப்பட்டுள்ளது. நேற்று காலை இந்த வழக்குக்காக கோர்ட்டுக்குப் போயிருந்தார் மாரியப்பன். இந்த நிலையில்தான் இரவில் அவரை எதிர்த் தரப்பு படு கொலை செய்துள்ளது.
விடிந்தால் மனைவிக்கு வளைகாப்பு என்ற நிலையில் கணவர் வெறித்தனமாக கொல்லப்பட்ட செயல் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications