சென்னை கத்திபாரா மேம்பாலத்துக்கு திடீர் பூட்டு- போராடி பூட்டை உடைத்த போலீஸ்- முடங்கிய போக்குவரத்து!
சென்னை: டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி சென்னை கிண்டி கத்திபாரா மேம்பாலத்தை சங்கிலியால் பூட்டு போட்டு இளைஞர் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வறட்சி நிவாரணம், விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் 31-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு மத்திய அரசு செவி சாய்க்காததை கண்டித்து, சென்னையின் கிண்டி கத்திபாரா மேம்பாலத்தை பூட்டு போட்டு போராட்டத்தில் மாணவர், இளைஞர் அமைப்பினர் ஈடுபட்டனர்.

பரபரப்பான கிண்டி பாலம்
சென்னையின் முக்கிய பாலமான கிண்டி கத்திபாரா பாலத்தை முடக்கியதால் காலை நேரத்தீல் வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனினும் விவசாயிகளுக்கான போராட்டம் என்பதால் வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு அளித்தனர்.

எஸ் வடிவம் முடக்கம்
கத்திப்பாரா மேம்பாலத்துக்கு பூட்டு போடப்பட்டதால் பாலத்தில் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. சென்னையின் பெரும் பகுதியின் போக்குவரத்தே முடங்கியதுபோல் இருந்தது. எஸ் வடிவத்தில் உள்ள இந்த மேம்பாலம் முழுவதும் இரு புறமும் சங்கிலியால் கட்டி பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இயக்குநர் கௌதமன் கலந்து கொண்டார்.

ஆம்புலன்ஸ்களுக்கு...
ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் விமான நிலையம், வடபழனி, போரூர் ஆகிய வழித்தடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டம், மீனவர்கள் பிரச்சினை, மீத்தேன் திட்டத்தை எதிர்த்தும் போராட்டம் நடத்தினர்.

30 நிமிடங்கள்
சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த போராட்டத்தை முடித்து கொள்ளுமாறு போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அவர்கள் கேட்காததால் போலீஸார் வலுக்கட்டாயமாக சங்கிலியை உடைத்து எறிந்தனர். இதனால் போக்குவரத்து மீண்டும் தொடங்கியதூ. சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இருப்பினும் வாகன நெரிசல் நீடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications