வேலூரில் பரபரப்பு.. நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு இளைஞர் கொலை.. போலீஸ் தீவிர விசாரணை
குடியாத்தம் அருகே உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகுமார் என்பவர் உயிரிழந்துள்ளார்.
வேலூர்: குடியாத்தம் அருகே உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகுமார் என்பவர் உயிரிழந்துள்ளார். சசிகுமாரை சுட்டது யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மாத்தூரைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அவரது நண்பர்களால் நேற்று இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடலை பரிசோதித்தபோது சசிகுமார் உயிரிழந்ததையும் அவரது உடலில் நாட்டுத்துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதையும் கண்டறிந்தனர். இதனால் மருத்துவர்கள் சந்தேகமடைந்தனர்.
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர். உடனே, மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், போலீஸ் வருவதை அறிந்த சசிகுமாரின் நண்பர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், உயிரிழந்த சசிகுமார் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், அவரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த நபர் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்