ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி நெல்லை, காஞ்சியில் போராட்டம்.. திக்குமுக்காடும் போலீசார்
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி நெல்லையிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
நெல்லை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளது. நெல்லையிலும் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அலங்காநல்லூரில் தொடர் போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, சென்னை, மதுரை, திருச்சி, சேலம், புதுக்கோட்டை என அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வேண்டும் என்று கோரி திருநெல்வேலியிலும் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக வலைதளத்தின் மூலம் ஒன்றிணைந்த போராட்டக்காரர்கள் ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
இதே போன்று காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இங்கும் சமூக வலைத்தளம் மூலமே இளைஞர்கள் ஒன்றுதிரண்டனர். 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடி பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
பின்னர், போலீஸ் உயர் அதிகாரிகள் இளைஞர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications