ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி திருச்சியில் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி திருச்சியில் தொழிலாளி ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.
திருச்சி: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. திருச்சியில் இன்று நடந்த போராட்டத்தில் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அலங்காநல்லூரில் தொடர் போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, சென்னை, மதுரை, திருச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, காஞ்சிபுரம் என அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அரியலூர், திருமானூரில் இளைஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் திரண்ட இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் நிலவியது. இதனிடையே திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ரயில் நிலையம் அருகே இளைஞர்கள், மாணவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை மெரினாவில் தொடர்ந்து இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் இரவிலும் போராடத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்தநிலையில் திருச்சி சிந்தாமணி அருகே அண்ணாசிலை அருகே ஜல்லிக்கட்டு நடத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது சுமை தூக்கும் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். திருச்சி வரகனேரி பகுதியைச் சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளி சதீஷ்குமார் தீக்குளிக்க முயற்சி மேற்கொண்டார். இதையடுத்து தீக்குளிக்க முயன்ற சதீஷ்குமாரை தடுத்து நிறுத்தி கோட்டை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications