கோகுல்ராஜ் கொலை வழக்கில் சரணடைந்த அருண் திருச்சி சிறையில் அடைப்பு
நாமக்கல்: தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றொரு முக்கியக் குற்றவாளியான அருண் கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அவரை திருச்சி த்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் கடந்த ஜூன் மாதம் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். தலித் இளைஞரான கோகுல்ராஜ், வேறு ஜாதிப் பெண்ணைக் காதலித்ததால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொலைவழக்கில் தலைமறைவாக இருந்து வந்த மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர்கள் பேரவை நிறுவனர் யுவராஜை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா கடந்த மாதம் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். உயரதிகாரிகளின் நெருக்கடி காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தன்னிடமிருந்த ஆடியோ ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பினார் யுவராஜ்.

இந்நிலையில், கடந்த ஞாயிறன்று நாமக்கல் சிபிசிஐடி அலுவலத்தில் யுவராஜ் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் மற்றொரு முக்கியக் குற்றவாளி அருண் ஆவார். இவர் யுவராஜின் டிரைவர் எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து தலைமறைவாக இருந்த அருண், இன்று கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பத்மநாபன், அருணை திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.
இது தொடர்பாக அருணின் வழக்கறிஞர் பழ.ஆனந்த் கூறுகையில், ‘இந்த வழக்கில் ஆரம்பத்தில் குற்றவாளிகள் 4 பேர் என்றார்கள், பின் 7 பேர் என்றார்கள், தற்போது 25 பேர் என்கிறார்கள். ஆகவே, முறையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்' என கோரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications