கும்பகோணம்: சாலை விபத்தில் இளைஞர் பலி - துக்க நிகழ்வுக்கு மாலை வாங்க சென்றபோது பரிதாபம்!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், மஸ்கட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 5 நாட்களிலேயே இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூரை அடுத்த கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் வடிவேல், மஸ்கட் நாட்டில் கொத்தனாராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், கீரனூர் கிராமத்தில் நேர்ந்த துக்க நிகழ்வுக்காக, இன்று கும்பகோணத்திற்கு மாலை வாங்குவதற்காக, வடிவேலுவும், அவரது நண்பர் ராஜேஷ்குமார் என்பவரும், மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். மாலை வாங்கிய பின்னர், கும்பகோணத்தில் இருந்து மீண்டும் தங்களது சொந்த ஊரான கீரனூருக்கு இருவரும் இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டு இருந்தனர்.
அப்போது, கும்பகோணம் அருகே சாக்கோட்டை என்ற இடத்தில் அவர்களது இருசக்கர வாகனம் வந்துகொண்டிருந்த போது, நன்னிலத்தில் இருந்து கும்பகோணம் வந்த தனியார் பேருந்து எதிரே வந்துள்ளது. கண் இமைக்கும் நேரத்தில், வடிவேலுவும், அவரது நண்பரும் வந்த இருசக்கர வாகனமும், அந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த வடிவேலு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த ராஜேஷ் குமார், ஆபத்தான நிலையில், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற நாச்சியார் கோவில் காவல் துறையினர், உயிரிழந்த வடிவேலுவின் உடலை கைப்பற்றி, உடல் உடற்கூறு ஆய்விற்காக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்து எப்படி நிகழ்ந்தது? என்ன காரணம் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மஸ்கட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 5 நாட்களிலேயே, துக்க வீட்டிற்கு மாலை வாங்க சென்றபோது, எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம், கீரனூர் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.