கஜாவினால் பாதிக்கப்பட்ட ஏழை மாணவி - மருத்துவ கனவை நனவாக்கிய சிவகார்த்திகேயன்
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட ஏழை மாணவியின் படிப்புக்கு உதவி செய்துள்ளார் நடிகர் சிவகார்த்திக்கேயன். அவர் செய்த உதவியால் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரியில் நுழைந்திருக்கிறார் அந்த மாணவி.
தஞ்சாவூர்: மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவு நம்மில் பலருக்கும் இருக்கும். சிலரது கனவு மட்டுமே நிறைவேறும், அந்த கனவு நிறைவேற முயற்சியுடன் அதிர்ஷ்டமும் கடவுள் அருளும் வேண்டும். கடவுள் மனிதர்கள் உருவத்தில் வந்துதான் உதவி செய்வார்கள். அந்த உதவியை பெற்று முயற்சியும் இடைவிடாத பயிற்சியும் பெற்ற ஏழை மாணவி ஒருவர் இந்த ஆண்டு மருத்துவ கல்லூரியில் அடி எடுத்து வைத்துள்ளார்.
கஜா புயல் வந்து கனவை சிதைத்தாலும் பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற்ற சஹானா என்ற மாணவிக்கு நடிகர் சிவகார்த்திக்கேயன் செய்த உதவியினால் நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து வெற்றி பெற்று இந்த ஆண்டு மருத்துவம் படிக்கப் போகிறார்.
பேராவூரணியைச் சேர்ந்த மாணவி சஹானா கடந்த ஆண்டு ப்ளஸ் 2வில் 600 மதிப்பெண்ணுக்கு 524 மதிப்பெண் பெற்றார். இந்தச் செய்தியை ட்விட்டரில் செல்வம் என்பவர் வெளியிட்டார்.
குருவின் வாழ்த்து
மின்சாரமில்லாத, கஜா புயலில் விழுந்த குடிசை வீட்டில் வாழ்ந்து கொண்டு மன உறுதியோடு படித்து,நடந்து முடிந்த ப்ளஸ் டூ தேர்வில் 600 க்கு 524 மதிப்பெண் பெற்றுள்ளார்,தஞ்சாவூர் பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த மாணவி சஹானா.#ஊக்கமது_கைவிடேல் என்று அரசுப்பள்ளி ஆசிரியர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
முயற்சிக்கு வாழ்த்து
இந்தப் பதிவைப் பார்த்த மூடர் கூடம் பட இயக்குநர் நவீன், "வாழ்த்துகள் சஹானா. இந்த 524 மதிப்பெண், நகரங்களில் பெரும்பள்ளிகளில் பெருந்தொகை கட்டி, ஸ்பெஷல் டியூஷன்கள் வைத்து, இரவு அம்மாவின் காம்ப்ளான் குடித்து படித்து பரிட்சை எழுதி எடுத்த பல 590களை விடவும் மேலானதே" என்று கூறினார்.
சிவகார்த்திக்கேயன் உதவி
இந்தப் பதிவை அடுத்த சில மணி நேரங்களில் ட்விட்டரில் பதிவிட்ட அரசுப்பள்ளி ஆசிரியர் செல்வம், நடிகர் சிவகார்த்திகேயன் மாணவிக்கு உதவ விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார். நன்றி நவீன் சார் கத்துக்குட்டி பட இயக்குநர் அண்ணன் சரவணன் மூலமாக சகோதரர் சிவகார்த்திகேயன் அவர்கள் மருத்துவபடிப்பு தொடர்பான முன்னெடுப்புகளை செய்வதாக உறுதி அளித்துள்ளார்கள் என்று கடந்த ஆண்டு பதிவிட்டார் ஆசிரியர் செல்வம்.
உறுதி அளித்த சிவகார்த்திக்கேயன்
அரசுப் பள்ளியில் படித்து 12 ஆம் வகுப்பில் 524 மதிப்பெண் எடுத்த சஹானா, மேற்படிப்பு படிக்க வழியில்லாமல் வறுமையில் தவித்தார். இதனையறிந்த சிவகார்த்திகேயன் கடைசி வரைக்கும் போராடு உனக்கு நான் இருக்கிறேன் என ஊக்கம் அளித்து சஹானாவை நீட் பயிற்சி மையத்தில் சேர்த்தார்.
உதவிய மாவட்ட ஆட்சித்தலைவர்
அந்த மாணவி குறித்து சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தகவல் பரவியதையடுத்து அவரது குடிசை வீட்டிற்கு, தஞ்சாவூர் ஆட்சித்தலைவர் அண்ணாதுரை, சஹானாவின் வீட்டுக்கு சோலார் மூலம் மின் விளக்கு அமைத்துக் கொடுத்ததோடு, தன் சொந்தப் பணத்தில் பத்தாயிரத்தைக் கொடுத்து உதவினார்.
முயற்சிக்கு கிடைத்த வெற்றி
சிவகார்த்திகேயனின் உதவி மட்டுமில்லாது அவரது ஊக்கம் சகானாவை மருத்துவராக்கியுள்ளது. மாணவி சஹானா தொடர் முயற்சி மற்றும் இடைவிடாத பயிற்சியின் காரணமாக இந்த ஆண்டு 273 மதிப்பெண் பெற்று 120 இடத்தை பிடித்த சஹானாவுக்கு திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி இடம் கிடைத்துள்ளது.
பாராட்டு
நடிகர் சிவகார்த்திக்கேயன் தற்போது டாக்டர் படத்தில் நடித்து வருகிறார். ஏழை மாணவியின் மருத்துவ கனவை நனவாக்கியுள்ள சிவகார்த்திக்கேயனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.