கும்பகோணம் அருகே விசிக கொடிக்கம்பம் உடைப்பு.. வருத்தம் தெரிவித்து அன்புமணி ராமதாஸ் பரபரப்பு கருத்து
தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் வன்னியர் சங்கத்தின் சார்பில் அண்மையில் நடத்தப்பட்ட சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு நடந்த இடத்திற்கு அருகில் வளையப்பேட்டை என்ற இடத்தில் வி.சி.க. கொடிக்கம்பம் பாமக தொண்டர்களால் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
வன்னியர் சங்கத்தின் சார்பில் சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தையடுத்த தாரசுரம் புறவழிச்சாலையில் கடந்த பிப்ரவரி 23ம் தேதி நடந்தது. இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் பல்லாயிரக்கணக்கான பாமக தொண்டர்கள் இந்த மாநாட்டில் பங்கேறறார்கள். கும்பகோணம் மொத்தமும் கடந்த 23ம் தேதி பாமக தொண்டர்களால் நிரம்பி வழிந்தது. சென்னை, முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாமக தொண்டர்கள் பங்கேற்றிருந்தார்கள்.

இந்த மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், "இந்த மாநாடு வெறும் டிரெய்லர்தான். மெயின் பிக்சர் அடுத்த மாநாட்டில் நடைபெற உள்ளது. பாமகவின் அடுத்த மாநாடு மாமல்லபுரத்தில் மே 11 ஆம் தேதி சித்திரை முழு நிலவு மாநாடாக நடைபெறும். இந்த சோழ மண்டலத்தில் அதிகமாக இருப்பவர்கள் விவசாயிகள் தான். இந்த விவசாயப் பெருங்குடி மக்களிடம் நான் கேள்வி கேட்க வேண்டும். இன்றைக்கு விவசாயிகளுக்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒரே ஒரு பாதுகாவலர் நமது அய்யா ராமதாஸ் தான். விவசாயிகளுக்கு எந்தப் பிரச்சனை என்றாலும் குரல் கொடுத்து போராடுபவர் ராமதாஸ் அய்யா தான்.
ஆனால், ஏன் எங்களுக்கு (பாமக) வாக்களிக்க மறுக்கிறீர்கள்? உங்களுக்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? காவிரி டெல்டா விவசாயிகளின் பாதுகாவலர் மருத்துவர் அய்யா. மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஓ.என்.ஜி.சி என எந்தப் பிரச்சனை என்றாலும் போராளியாக வந்து நிற்பவர் அய்யா தான். இங்கு போட்டியிட்ட பாமக வேட்பாளரை, எங்கிருந்தோ வந்து இங்கு போட்டியிட்டவரிடம் (மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுதா எம்பியிடம்) தோல்வி அடைய வைத்துவிட்டீர்கள்.
இன்றைக்கு காவிரி டெல்டாவையே அழித்திருப்பார்கள். பலகட்ட போராட்டங்கள் நடத்தி, திட்டங்களை ரத்து செய்ய வைத்து டெல்டாவை காப்பாற்றியவர் ராமதாஸ் அய்யா. எங்கள் உரிமையை நாங்கள் கேட்கிறோம். தொடர்ந்து இந்தச் சமுதாயத்திற்காகப் போராடி வருகிறோம். இதனை நீங்கள் எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும்" என அன்புமணி ராமதாஸ் பேசியிருந்தார்.
இந்நிலையில் கும்பகோணம் மாநாட்டில் பங்கேற்க வந்த பாமக தொண்டர்கள் சிலர் மாநாடு நடந்த இடத்திற்கு அருகில் வளையப்பேட்டை என்ற இடத்தில் வி.சி.க. கொடிக்கம்பத்தை சேதப்படுத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் வன்னியர் சங்கத்தின் சார்பில் அண்மையில் நடத்தப்பட்ட சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு நடந்த இடத்திற்கு அருகில் வளையப்பேட்டை என்ற இடத்தில் வி.சி.க. கொடிக்கம்பம் தொண்டர்களால் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்காக எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் காலங்களில் எந்தக் கட்சிக்கு எதிராகவும் இத்தகைய செயல்களில் தொண்டர்கள் ஈடுபடக்கூடாது என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications