நீதிபதியிடம் அரியலூர் மாணவி கொடுத்த மரண வாக்குமூலமா இது? தீயாக பரவும் தகவல்!
தஞ்சாவூர்: அரியலூரில் களைகொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி மாஜிஸ்திரேட்டிடம் கொடுத்த மரண வாக்குமூலம் என 8 பக்கங்களுடனான ஆவணம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படவில்லை.
அரியலூர் மாணவி மாஜிஸ்திரேட்டிடம் அளித்ததாக கூறப்படும் மரண வாக்குமூலத்தில் இடம்பெற்றுள்ளதாவது: நான் திருக்காட்டுப்பள்ளி மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலை பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் படித்து வருகிறேன். அங்கு ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தேன்.
சகாயமேரி என்ற சிஸ்டர் ஹாஸ்டலை பார்த்துக் கொண்டும் வார்டனாக இருப்பார். அவர் என்னிடம் மட்டும் ஹாஸ்டலில் உள்ள கணக்கு வழக்குகளை பராமரிக்கும் பில்களை நோட்டில் எழுத சொல்வார்.
எல்லா ரூமையும் சுத்தம் பண்ணு.. வார்டன் கொடுத்த டார்ச்சர்.. தஞ்சாவூரில் +2 மாணவி தற்கொலை.. பின்னணி
ஹாஸ்டல் கணக்குகள்
என்னை திட்டிக் கொண்டே இருப்பார். என்னை விடுமுறைக்கு வீட்டிற்கு அனுப்ப மாட்டார். எங்கள் வீட்டில் வந்து கேட்டால் இங்கு இருந்தால் தான் ஒழுங்கா படிப்பா என்று சொல்லிவிடுவார். எனக்கு படிக்க வேண்டி இருந்ததால் நான் ஹாஸ்டல் கணக்கு வழக்குகளை பார்க்க மாட்டேன் என்று சொன்னேன். அதை கேட்காமல் என்னை திட்டி நீதான் நான்கு வருடம் பார்த்த, இந்த வருடமும் நீதான் கணக்குகளைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி கிறிஸ்துமஸ் லீவுக்கு என்னை வீட்டிற்கு அனுப்பாமல் ஹாஸ்டல் கணக்குகளை எழுத வைத்துவிட்டார்.
வார்டனின் திட்டு
அவர் வேலைகளை என்னிடம் கட்டாயப்படுத்தி வாங்கினார். நான் ஒரு வருடம் படிப்பு தான் உள்ளது என்று பொறுத்து கொண்டேன். எனக்கு உடம்பு சரியில்லாமல் போனால் லீவு தர மாட்டார். செத்தா போயிட்ட என்று திட்டுவார். ஹாஸ்டலில் பீஸும் கட்டிவிட்டார்கள். ஒழுங்காக சாப்பாடு போட மாட்டார்கள். என்னை திருச்சியில் உள்ள கான்வெட்டுக்குக் கூட்டிப்போய் ஹாஸ்டல் கணக்குகளை ஒப்படைத்தார். என்னை அடிக்கடி திட்டுவார்.
களைக்கொல்லி குடிச்சுட்டேன்
பொருள் ஏதும் காணவில்லை என்றால் என்னை திட்டுவார். நான்தான் வெளியே கொடுத்துவிட்டேன் என்று பேசுவார். ஜனவரி 9-ந் தேதி மாலை 5 மணியளவில் ஹாஸ்டலில் இருந்து களைக்கொல்லி மருந்தை எடுத்து சாப்பிட்டு விட்டேன். அது யாருக்கும் தெரியாது. உடனே நான் வாந்தி எடுத்து விட்டேன். அப்போது பச்சையாக வெளியே வந்தது. அது பற்றி கேட்டதற்கு நான் ஒன்றும் சொல்லவில்லை. உடம்பு சரியில்லை என்று அங்கு எங்க ஊர் வடுகம்பாளையம் சென்றுவிட்டேன்.
சிஸ்டரின் டார்ச்சர்
அங்கு எனக்கு வாய், நாக்கு, தொண்டை எரிச்சல் ஆக இருந்ததால் அங்கிருந்த மெடிக்கலிலும் அரசு மருத்துவமனையிலும் சென்று மருத்துவம் பார்த்தோம். நேற்று எனக்கு வயிற்றிலும் எரிய ஆரம்பித்து. அதனால் மருந்து குடித்தது பற்றி வீட்டில் சொன்னேன். அதன் பின்னர்தான் இங்கு வந்து சிகிச்சைக்கு சேர்த்தனர். என்னை சகாயமேரி ஹாஸ்டல் பில்களை கணக்கு எழுத வேண்டும் என்று மீண்டும் டார்ச்சர் செய்தார். அதனால்தான் நான் மருந்து சாப்பிட்டு விட்டேன். என்னுடைய இந்த நிலைமைக்கு அவர்தான் காரணம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறு ஏதுமில்லை. இவ்வாறு அரியலூர் மாணவியின் மரண வாக்குமூலம் என பகிரப்பட்டு வரும் ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.