ராமலிங்கம் படுகொலை.. தஞ்சையில் நாளை போராட்டம்.. பாஜக, இந்து அமைப்புகள் அறிவிப்பு
கும்பகோணம்: நாளுக்கு நாள் விஸ்வரூபமெடுத்து வருகிறது திருபுவனம் ராமலிங்கம் படுகொலை விவகாரம். இப்படுகொலையை கண்டித்து நாளை தஞ்சையில் போராட்டம் நடைபெறும் என பாஜக மற்றும் இந்து அமைப்பினர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த திருபுவனத்தை சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கத்தின் படுகொலை தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனால் படுகொலை நடந்து அடுத்த 2 நாட்களுக்கு பொதுமக்கள் கண்டித்து திருபுவனத்தில் கடையடைப்பும், மறியலும் நடத்தினர். இதனால் பதட்டமான ஒரு சூழல் அப்போது ஏற்பட்டது.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ராமலிங்கம் படுகொலைக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தனர். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்தனர்.

கார் பறிமுதல்
இதையடுத்து இந்த படுகொலை தொடர்பாக முதலில் 5 பேரும், பிறகு 3 பேரும் என கைது செய்யப்பட்டு அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், கொலையாளிகள் பயன்படுத்திய கார் திருச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முகமது இப்ராஹிம் என்பவருக்கு சொந்தமானதுதான் அந்த கார் என்று தெரியவந்ததையடுத்து, போலீசார் இன்று அவரை கைது செய்தனர்.

இந்து முன்னணி
இதனிடையே இந்த படுகொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தஞ்சை மாவட்டத்தில் நாளை கடையடைப்பு போராட்டத்திற்கும் கும்பகோணத்தில் அமைதிப் பேரணி நடத்துவதற்கும் இந்து அமைப்பினர் ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தனர்.

பேச்சுவார்த்தை
ஆனால் இந்த போராட்டங்களை கைவிட வேண்டும் என்று கும்பகோணம் ஆர்டிஓ உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் இந்து அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த கூட்டத்தில் பாஜகவினரும் கலந்து கொண்டனர். அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நிகழக்கூடும் என்பதால், கடையடைப்பு மற்றும் பேரணியை தவிர்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். ஆனால் பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் அதனை ஏற்க மறுத்து அவர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

திட்டவட்டம்
இறுதிவரை எந்த உடன்பாடும் எட்டப்படாததால், அவர்கள் வெளிநடப்பு செய்ததுடன், நாளைய தினம் கடையடைப்பு போராட்டம், மற்றும் அமைதி பேரணி திட்டமிட்டபடி நடக்கும் என்றும் பாஜகவினர் அறிவித்துள்ளனர். காந்தி பூங்கா முதல் முக்கிய சாலை வழியாக மகாமக குளம் வரை அமைதி பேரணியும், கடையடைப்பும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

எச்.ராஜா
இதைவிட முக்கிய அம்சம் என்னவென்றால், இந்த பேரணியில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே நாளைய தினம் தஞ்சை மாவட்டத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து போலீசார் இப்போதே அதிரடியில் இறங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications