மோடி படம் எங்க? கும்பகோணம் எம்.எல்.ஏ. காரை மறித்து கருப்புக்கொடி காட்டிய பாஜகவினர் கைது
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் அனைவருக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணை வழங்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை வைக்கவில்லை என்றுகூறி பாஜகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் 14 பயனாளிகளுக்கு, ரூ.29.40 லட்சம் மதிப்பிலான பணி ஆணைகள் வழங்கும் விழா பேரூராட்சி தலைவர் ஜோதி தாமரைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இதில் தஞ்சை மண்டல பேரூராட்சி உதவி இயக்குனர் கனராஜ், பேரூராட்சி துணைத் தலைவர் உதயா உப்பிலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார்.
இவ்விழாவில், பேரூராட்சி சார்பில் வைக்கப்பட்ட விளம்பர பதாகையில், மறைந்த முதல்வர் மு.கருணாநிதி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்று இருந்தன. இந்த நிலையில் பாஜகவை சேர்ந்தவர்கள் விளம்பர பதாகையில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம்பெறவில்லை எனக் கூறி முற்றுகையில் ஈடுபட்டனர்.
சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் நிகழ்ச்சி முடித்து, பேரூராட்சி நுழைவு வாயில் அருகே வரும் போது, அவரை எதிர்த்து கருப்பு கொடி ஏந்தி பாஜகவினர் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் நிதியுதவியுடன் நடைபெறும் இத்திட்டத்தில் பிரதமர் மோடி படம் மற்றும் பெயர் சேர்க்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டினர்.
இதனால் ஆத்திரமடைந்த விழாவுக்கு வந்த திமுகவினர், பாஜகவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. தகவலறிந்த திருவிடைமருதூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் வெற்றிவேந்தன் தலைமையிலான போலீசார் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
எது நெஞ்சுக்கு நீதி?.. இந்துக்கள் ஒற்றுமையை காட்டுங்கள்.. பாஜக காயத்ரி ரகுராம் பரபரப்பு ட்வீட்