தாத்தாவானார் திவாகரன்.. சசிகலா கோபம் தணியுமா?.. குடும்பத்தை இணைப்பாரா 'குட்டி' ஜெயானந்த்?
மன்னார்குடி: ஜெயானந்த் திவாகரனுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளதையடுத்து, சசிகலா சகோதரர் திவாகரன் தாத்தாவாகியுள்ளார்.
சசிகலாவின் இளைய சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் திருமணம் கடந்த ஆண்டு மார்ச் 5ம் தேதி மன்னார்குடியில் கோலாகலமாக நடைபெற்றது. சசிகலாவின் உறவினர் வி பாஸ்கரனின் மகள் ஜெயஸ்ரீயை மணமுடித்தார் ஜெயானந்த்.
இந்நிலையில், இன்று ஜெயானந்த் - ஜெய்ஸ்ரீ தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது
திருமணத்திற்கு செல்லவில்லை
முன்னதாக, ஜெயானந்த் திருமணத்திற்கு சசிகலா சார்பில் யாரும் செல்லவில்லை. சிறையில் இருந்த இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா அவரது தம்பியும், ஜெயா டிவியின் தலைமை செயல் அதிகாரியான விவேக் ஜெயராமன் உள்ளிட்ட நெருங்கிய குடும்பத்தினர் ஜெயானந்த் திருமணத்திற்கு செல்லவில்லை. டிடிவி தினகரனும், ஜெயானந்த் திருமணத்திற்கு செல்லவில்லை. ஆனால், அவர் செல்லாமல் இருப்பதற்கு காரணம் வேறு என்று அப்போது தெரிவிக்கப்பட்டது.
சசிகலா நோட்டீஸ்
அரசியல் ரீதியாக, சசிகலா குடும்பத்தில் இருந்து திவாகரன் ஒதுக்கப்படுகிறார் என்பதை தெளிவாக நாம் காண முடிகிறது. அதிமுகவை இ.பி.எஸ். , ஓ.பி.எஸ் வழிநடத்திக் கொண்டிருக்க, தனிக்கட்சி தொடங்கிய டிடிவி தினகரனுடன் முட்டிக் கொண்ட திவாகரன், மன்னார்குடியில் அம்மா அணி செயல்படுவதாக கூறி அதற்கான அலுவலகத்தை சசிகலா படத்துடன் திறந்தார். இதையடுத்து, 'தன்னை உடன் பிறந்த சகோதரி என அழைக்கக்கூடாது, தனது பெயரை பயன்படுத்த கூடாது' என வழக்கறிஞர் மூலம் சசிகலா நோட்டீஸ் அனுப்பினார்.
புறக்கணிக்கும் சூழல்
இதனைத்தொடர்ந்து, அண்ணா திராவிடர் கழகம் என்ற பெயரில் தனிக்கட்சியை தொடங்கிய திவாகரன், அதற்கான கொடியையும் அறிமுகப்படுத்தினார். இதனால், திவாகரனுக்கும் சசிகலா குடும்பத்திற்குமான பிணக்கம் அதிகரித்ததன் காரணமாக, ஜெயானந்த் திருமணத்தையே அவர்கள் புறக்கணிக்கும் சூழல் உருவானது.
நாளைய தலைவர்
அதுமட்டுமின்றி, தஞ்சையில் நடைபெற்ற திமுக தஞ்சாவூர் எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் இல்லத்திருமண விழாவில் கலந்து கொண்ட திவாகரன், "தமிழகத்தில் திராவிட பாரம்பரியத்தை காக்க வேண்டும். அதை காக்கும் ஒரே சக்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான். நாளைய தமிழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின்" என்று பகிரங்கமாக அறிவித்தார்.
முதல்வர் சவால்
தற்போது தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், சிறையிலிருந்து சசிகலா ரிலீஸாகியுள்ளார். ஆனால், ஆளும் கட்சித் தரப்பில் 'சசிகலாவால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது' என்று பலமாக குரல்கள் ஒலித்து வருகின்றன. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை மெல்ல மெல்ல தொடங்கியிருக்கும் சூழலில், சசிகலா எப்போது வேண்டுமானாலும் அதிமுகவில் என்ட்ரி கொடுக்கலாம் என்று முணுமுணுக்கப்பட்டு வருகிறது.
குட்டி ஜெயானந்த்
இந்த சூழலில், பிரிந்திருக்கும் தம்பி திவாகரனும், சசிகலாவுடன் கைக்கோர்த்தால், நிச்சயம் அது அரசியல் ரீதியாக இல்லாவிடிலும், மனரீதியாக ஒரு பெரும் ஆதரவாக சசிகலாவுக்கு இருக்கும். இப்படிப்பட்ட தகதக சூழலில் பிறந்துள்ள குட்டி ஜெயானந்த், பிரிந்திருக்கும் குடும்பத்தை ஒன்று சேர்ப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.