எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி? ரயிலில் சிக்கிக்கொண்ட டயர்.. தஞ்சாவூர் அருகே பரபரப்பு!
தஞ்சாவூர்: எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு அடியில் டயர் சிக்கியிருந்தது தஞ்சாவூரில் கண்டுபிடிக்கப்பட்டது. ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து தமிழ்நாட்டின் திருப்பூர், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர் வழியாக புதுச்சேரி மாநிலம் காரைக்கால் வரை இரு மார்க்கத்திலும் தினசரி விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்ட விரைவு ரயில் காரைக்கால் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த ரயிலில் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை திருச்சியைத் தாண்டி தஞ்சாவூர் நோக்கி வந்தது. அப்போது ரயிலில் முன்பதிவு பெட்டிகளான எஸ்-1 மற்றும் எஸ்-10 பெட்டிகளுக்கு இடையே பயோ-கேஸ் கழிப்பறைக்கான கழிவுகள் வெளியேறக் கூடிய குழாய்க்கு அடியில் டயர் ஒன்று சிக்கி இருந்தது.
இதைப் பார்த்த பயணி ஒருவர், உடனே ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தார். சற்று நேரத்தில் ரயில் தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு வந்து நின்றது. அங்கு இறங்கிச் சென்று பார்த்த ரயில் என்ஜின் டிரைவர், டயர் சிக்கி இருப்பதைக் கண்டு அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, உடனடியாக அங்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ரயில் சக்கரத்தில் சிக்கி இருந்த டயரை வெளியே எடுத்தனர். மேலும் டயரால் என்ஜின் உள்ளிட்ட இடங்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்தனர். ஆனால் பாதிப்பு எதுவும் இல்லை என்பதை உறுதி செய்தனர்.
அதன் பிறகே தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து எர்ணாகுளம் - காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்றது. சுமார் 40 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். ரயிலில் டயர் சிக்கியது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்மைக்காலமாக ரயில் தடம்புரளும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், ரயிலுக்கு அடியில் டயர் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ரயிலை கவிழ்ப்பதற்காக யாரும் டயரை தண்டவாளத்தில் வைத்து சதி செய்தார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications