தருமபுரம் ஆதீனம் 26வது குரு மகா சந்நிதானம் 96 வயதில் காலமானார்!
தஞ்சாவூர்: தருமபுரம் ஆதீனம் எனப்படும் 26வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், உடல்நலக்குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தினார்.. அவருக்கு வயது 96
இந்தியாவின் பழைமையான சைவ ஆதீனங்களின் ஒன்றுதான் தருமபுரம் ஆதீனம். இதனை தருமை ஆதீனம் என்றும் சொல்வார்கள். இது சைவ மடங்களுள் ஒன்று. மயிலாடுதுறையில் இந்த மடம் உள்ளது.
இதில் 26ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பு வகித்து வந்தார். வயோதிகம் காரணமாக இவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்ட நிலையில், தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று மதியம் காலமானார்.

மயிலாடுதுறை
உயிரிழந்த ஆதீனம் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டவர்.. ஆதீனம் சார்பாக, சமயம் சார்ந்த பணிகள் மட்டுமின்றி, மயிலாடுதுறையில் மகப்பேறு நிலையம் அமைத்தது முதல், சிங்கிப்பட்டி காசநோய் ஆஸ்பத்திரி, அடையார் புற்றுநோய் ஆஸ்பத்திரி போன்ற பொது நிறுவனங்களுக்கு ஏராளமான நிதி உதவியை இவர் செய்துள்ளார். இதை தவிர எத்தனையோ ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்கவும் இவர் எடுத்த முயற்சி ஏராளம்.

துணை நின்றவர்
இன்றும்கூட இவர் வகுத்த பாதையில்தான் ஆதீனத்தின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன. அதேபோல, மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க தமிழக அரசை மாவட்ட மக்கள் வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களையும் செய்தனர். அப்போது, மக்களுக்காக துணை நின்றவர் தருமபுரம் ஆதீனம்தான்..

நித்யானந்தா
"நிர்வாக வசதிக்காக மாவட்டத்தை பிரிக்க வேண்டும், அப்படி பிரித்த பின்னரும் மக்கள் எல்லாரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டவர். சர்ச்சைகளுக்கு புகழ்போன நித்தியானந்தா, இவரையும் கடந்த 2012-ல் விட்டு வைக்கவில்லை..

பெரும் சோகம்
"மதுரை ஆதீனமாக தாம் நியமிக்கப்பட்டதை விமர்சிக்கும் தருமபுரம் உள்ளிட்ட ஆதினங்கள் மீது பிடதி பீட பக்தர்கள் மான நஷ்ட வழக்கு தொடுப்பார்கள்" என்று அன்றே எச்சரிக்கையும் விடுத்திருந்தது நினைவிருக்கலாம். பல நல்ல செயல்களை முன்னெடுத்து.. மக்களின் ஒற்றுமைக்காகவும், நல்வழிக்காகவும் அரும்பாடு பட்ட தருமபுரம் ஆதீனத்தின் மறைவு பக்தகோடிகளுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications