பேராவூரணியே வியந்த திருமணம்.. பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கறிவிருந்து சீர் வரிசையுடன் அசத்திய ஐஏஎஸ்
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பெற்றோரை இழந்த பாண்டி மீனாவுக்கு, தந்தை ஸ்தானத்தில் நின்று, தனது சொந்த செலவில் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார் பத்திரப் பதிவுத் துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். இவர் முன்பு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக இருந்த போது, பேராவூரணியில் பாண்டி மீனா என்ற பெண், பெற்றோரை இழந்து, மனவளர்ச்சி குறைந்த தங்கையுடன், வீட்டில் யாருமில்லாமல் தவித்தார். இதைகண்ட தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐஏஎஸ், பாண்டி மீனாவிற்கு தந்தை ஸ்தானத்தில் அனைத்து உதவிகளையும் செய்திருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் ஆலிவர் பொன்ராஜ், கடந்த 2003ம் ஆண்டு குரூப் 1 தேர்வு எழுதி வெற்றி பெற்று , சொந்த மாவட்டமான கன்னியாகுமரியிலேயே பணியை தொடங்கினார். பின்னர் 2004 முதல் 2006ம் ஆண்டு வரை மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஆர்டிஓவாக பணியாற்றினார். அதன்பிறகு 2007ம் ஆண்டில் மதுரையில் பொறுப்பு கலெக்டர் பணியில் இருந்தார்.

தஞ்சாவூர் ஆட்சியர்
கடந்த 2012ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று ஐஏஏஸ் அதிகாரியாக தேர்வானார். ஐஏஎஸ் அதிகாரியாக மாறிய பின்னர், தூத்துககுடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றினார். அதன்பிறகு பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றினார். இந்நிலையில் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 16ம் தேதி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார்.
ஏராளமானோருக்கு உதவி
தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை பொறுத்தவரை ஏராளமானோருக்கு உதவி செய்துள்ளார். அரசு வழியாகவும், தனிப்பட்ட முறையிலும் உதவி செய்திருக்கிறார். அவரிடம் உதவி என்று வந்த பலருக்கும், அதிகாரத்தின் மூலம் அரசிடம் கோரிக்கையாக கொண்டு சென்று அவர்களை உயர்த்தி உள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் இதை இப்போது கேட்டாலும் சொல்வார்கள்.
பாண்டி மீனா
அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் ஒன்றியத்திற்கு உள்பட்ட ரெட்டவயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கண்ணையா செல்வி தம்பதி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகள் பாண்டி மீனா நர்சிங் படித்துள்ளார். இரண்டாவது மகள் பாண்டீஸ்வரி மாற்றுதிறனாளி ஆவார். இதில் கண்ணையா கடந்த 2021ம் ஆண்டு புற்றுநோயால் இறந்துபோனார். தாயாரும் கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் சிறுநீரக பாதிப்பால் காலமானார். பெற்றோரை இழந்த பாணடி மீனா, தனது மனவளர்ச்சி குன்றிய தங்கையுடன் குடிசைவீட்டில் தவித்து வந்தார்.
நேரில் சென்றார்
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் வாட்ஸ் அப் மூலம் பாண்டி மீனா தனது, வீட்டின் நிலை, பெற்றோர் இல்லாமல் ஆதரவு இன்றி தவிப்பது குறித்து உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார். இதையடுத்து தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐஏஎஸ், நேரில் பாண்டி மீனா வீட்டிற்கு சென்றார். அங்கு அவரது நிலையை கண்டு கலங்கி போனார்.
வீடு கட்டி கொடுத்தார்
பின்னர் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2.40 லட்சம் ரூபாய் பணத்திற்கு ஏற்பாடு செய்து தன் விருப்ப நிதியில் இருந்து 1.50 லட்சம் கொடுத்து, தன்னார்வலர்களையும் இணைத்து நிதி கொடுக்க கோரிக்கை வைத்தார். இதன்படி, பேராவூரணி லயன்ஸ் கிளப் சார்பில் 1.50 லட்சம் நிதி கொடுக்கப்பட்டது. எல்லாவற்றையும் சேர்த்து வைத்து, கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 4 தேதி வீடு கட்டி திறப்பு விழா வைக்கப்பட்டது. அப்போது வீட்டிற்கே சென்ற தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், புதிய வீட்டினை பாண்டி மீனாவிடம் ஒப்டைத்தார்.
பத்திரப்பதிவு ஐஜி
தனக்கு உதவி செய்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐஏஎஸ் அவர்களை அப்பா அப்பா என்று அழைத்த பாண்டி மீனா, தனது அப்பா உதவி செய்ததற்காக உருக்கமாக கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். இந்தநிலையில், பதவி உயர்வில் பத்திரப்பதிவுத்துறை தலைவராக சென்னைக்கு சென்றார் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். சென்னைக்கு வந்த பின்னரும் பாண்டி மீனா மீது தனி அக்கறையுடன் கவனம் செலுத்தி வந்தார்.
தந்தையாக மாறி திருமணம்
இந்த நிலையில் பாண்டி மீனாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. இதனை தந்தையின் இடத்தில் இருந்து பாண்டி மீனாவுக்கும் அபிமன்யு என்பவருக்கும் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் திருமணம் பேசி முடித்தார். அதன்படி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் நேற்று திருமணம் நடைபெற்றது. பெற்றோரை இழந்த பாண்டி மீனாவிற்கு தன் கையால் மணமகனிடம் தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார்.
திருமணம் எப்படி நடந்தது
திருமணத்தை அவர் எப்படி நடத்தினார் என்றால், பேராவூரணியில் மண்டபம் பிடித்து, பத்திரிகை அடித்து, கறி விருந்து வைத்து, மணமக்கள் வாழ்வதற்கு தேவையான அனைத்து சீர் வரிசை பொருள்களையும் வழங்கி, திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த விழாவில் பேராவூரணி லயன்ஸ் சங்கத்தினர், தன்னார்வலர்கள், ஊர் பொதுமக்கள், பேராவூரணியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் வந்திருந்தனர். தந்தை போல் மாறிய தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், நன்றாக பார்த்துக் கொள் என்று பாண்டி மீனாவை, மணமகன் அபிமன்யூ கையில் கொடுத்துவிட்டு சென்றார். தந்தை ஸ்தானத்தில் இருந்து ஆதரவற்ற பெண்ணுக்கு தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் ஐஏஏஸ் உதவியதை தமிழக மக்கள் பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications