கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் திமுக ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கத்தியால் குத்தி கொலை
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் திமுக ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம், அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் என்பவரது மகன் ராஜேந்திரன் (65). இவர் பட்டீஸ்வரம் 4-வது திமுக வார்டு உறுப்பினராக இருந்தார். மேலும் பட்டீஸ்வரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவராகப் பதவியில் இருந்தார்.

ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜேந்திரனுக்கும், இவரது சகோதரர் ராஜ் மகன் குமார்(40) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது
இந்நிலையில், கடந்த 18-ம் தேதி இரவு கடைத்தெருவில் நின்றிருந்த ராஜேந்திரனை, கத்தியால் கழுத்து மற்றும் முகத்தில் குமார் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில், பலத்த காயமடைந்த ராஜேந்திரனை, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து பட்டீஸ்வரம் போலீஸார், வழக்குப் பதிந்து குமாரை கடந்த 19-ம் தேதி கைது செய்து புதுக்கோட்டை சிறையிலடைத்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜேந்திரன் இன்று உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். ஊராட்சி மன்ற துணை தலைவர் முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications