உடல்நலக்குறைவு.. முன்னாள் அமைச்சர் பூண்டி கி.அய்யாறு வாண்டையார் காலமானார்.. பூண்டியில் இறுதிச்சடங்கு
தஞ்சாவூர்: தஞ்சாவூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பூண்டி கி. அய்யாறு வாண்டையார் இன்று சென்னையில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவருக்கு 86 வயது ஆகிறது.
காங்கிரஸ், அதிமுக கட்சியிலும், டெல்டா மாவட்ட அரசியலிலும் மிக முக்கியமான நபராக இருந்தவர் பூண்டி கி. அய்யாறு வாண்டையார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த ஒரு வாரமாக இவரின் உடல்நிலை மோசமானதை அடுத்து, இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வயோதிகம் காரணமாக இவருக்கு உடலில் பல்வேறு பாதிப்புகள், குறைபாடுகள் இருந்தன. இந்த நிலையில் இன்று அதிகாலை இவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
88 வயது நிரம்பிய பூண்டி கி. அய்யாறு வாண்டையார் 1984ல் தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்வானார். அந்த தேர்தலில் இவர் காங்கிரஸ் கட்சி சார்பாக தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். காங்கிரசில் இவர் முக்கியமான நபராக பார்க்கப்பட்டாலும், அதன்பின் அதிமுகவில் இணைந்தார்.
அதிமுக சார்பாக 2001ல் திருவையாறு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அப்போது அறநிலையத்துறை அமைச்சர் பொறுப்பையும் இவர் வகித்து வந்தார். பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி முன்னாள் தாளாளர் மறைந்த துளசிஅய்யா வாண்டையாரின் சகோதரர்தான் பூண்டி கி. அய்யாறு வாண்டையார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று தஞ்சாவூரில் உள்ள பூண்டி கிராமத்தில் இவருக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications