பீகாரிலிருந்து தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வந்தவர்களில் ஆளுநர் ரவியும் ஒருவர்! எகிறி அடித்த எ.வ.வேலு!
தஞ்சாவூர்: பீகாரிலிருந்து தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வந்தவர்களில் ஆளுநர் ரவியும் ஒருவர் என அமைச்சர் எ.வ.வேலு பரபரப்பு விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து யாரும் வேலை தேடி பீகாருக்கு செல்வதில்லை என்றும் பீகாரிலிருந்து தான் பலரும் இங்கு வேலை தேடி வருகிறார்கள் எனவும் கூறியுள்ளார்.

கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் எ.வ.வேலு, ஆளுநர் ரவி மீதான தனது கோபத்தை கொட்டித்தீர்த்தார். அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் ரவி கெடுபிடி காட்டி வரும் நிலையில் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் பீகாரிலிருந்து தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வந்தவர்களில் ஆளுநர் ரவியும் ஒருவர் என அமைச்சர் வேலு விமர்சித்துள்ளார். மேலும், மாநில சுயாட்சிக்கு ஆபத்து வந்துள்ளதாகவும் அதனை திமுக அரசு எதிர்கொண்டு வெற்றிபெறும் எனவும் தெரிவித்தார்.
கடந்த இரண்டாண்டுகளில் திமுக அரசு செய்த சாதனைகளை பட்டியலிட்டு பேசிய அமைச்சர் எ.வ.வேலு, இன்னும் என்னென்ன திட்டங்களை வரும் நாட்களில் அரசு செய்யவுள்ளது என்பது குறித்தும் பேசினார். ஆளுநருக்கு எதிராக அமைச்சர்கள் பொதுக்கூட்டங்களில் பேசத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தையும், அருங்காட்சியகத்தையும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் நாளை திறந்து வைக்கவிருக்கிறார்.
பீகார் முதல்வர் தமிழகம் வரும் நிலையில், அதுவும் குறிப்பாக கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்க வரும் நிலையில், தமிழ்நாட்டிலிருந்து யாரும் வேலை தேடி பீகாருக்கு செல்வதில்லை என்றும் பீகாரிலிருந்து தான் பலரும் இங்கு வேலை தேடி வருகிறார்கள் எனவும் அமைச்சர் வேலு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications