இந்து கோவில் வருமானத்தை அரசு நிர்வாகத்துக்கு செலவழிப்பதா? கொதித்து எழுந்த விஸ்வ இந்து பரிஷத்
தஞ்சாவூர்: ‛‛இந்து கோவில்களில் இருந்து வரும் வருமானத்தை அரசு நிர்வாக செலவுகளுக்கு பயன்படுத்த கூடாது. இந்த வருமானத்தை கோவில்களின் பாராமரிப்புக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்'' என விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் அகில உலக செயல் தலைவர் அலோக்குமார் கூறினார்.
விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தேசிய அளவிலான மாநாட்டு கூட்டம் காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் உள்ள தனியார் விடுதியில் நேற்று முன்தினம் துவங்கியது.
இந்த கூட்டம் ஜூன் 27ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
”முஸ்லிம்களுக்கு கட்டாய கருத்தடை.. இந்து ராஷ்டிரம்” - உபி கிரந்தி சேனா மாநாட்டில் மதவெறி பேச்சு
வெளிநாட்டு நிர்வாகிகள்
அதாவது நேபாளம், தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஜம்முகாஷ்மீர், ராஜஸ்தான், அஸாம் உட்பட பல்வேறு வெளி மாநிலங்களிலிருந்தும் அமைப்பின் நிர்வாகிகள் சுமார் 422 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் அகில உலக செயல் தலைவர் அலோக்குமாரும் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் அலோக் குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
உண்மையான நபரை கைது செய்யுங்க
தெலங்கானா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தில் காஞ்சிபுரம் அருகே கண்டிவாக்கம் ஆகிய இடங்களில் சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரத்தில் சுவாமி சிலைகள் சேதம் தொடர்பாக ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மனநிலை சரியில்லாதவர் என்றும் குடிபோதையில் செய்திருக்கிறார் என்றும் காவல்துறை சொல்வதை நம்ப முடியவில்லை. இதில் சம்பந்தப்பட்ட உண்மையான நபரை கைது செய்ய வேண்டும்.
இந்துக்களிடம் கோவில்களை ஒப்படைக்க...
கோவில், சிலை சேதப்படுத்துவது தடுக்கப்பட வேண்டும். இதனால் சிலைகளை உடைத்தவர்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுத உள்ளோம். அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் கோவில்களை விடுவித்து அவற்றை இந்துக்களிடமே ஒப்படைக்க வேண்டும்.
கோவிலுக்கு மட்டுமே செலவிட வேண்டும்
முக்கியமாக இந்து கோவில்களில் இருந்து வரும் வருமானத்தை அரசு தனது நிர்வாக செலவுகளுக்கு பயன்படுத்தக்கூடாது. இந்து கோவில்களை ஒரு சில மாநில அரசுகள் தொடர்ந்து நிர்வகித்து வருவது வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தின் தொடர்ச்சியாகவே அமைப்பு கருதுகிறது. இந்து கோவில்களில் இருந்து வரும் வருமானத்தை கோவில்களின் பராமரிப்புக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்'' என்றார்.