விபத்தால் முடங்கிய குடும்பத்தலைவன்... வறுமையில் வாடிய குடும்பம்.. கறவைமாடு வழங்கிய திமுக எம்.எல்.ஏ.!
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே வறுமையில் வாடிய குடும்பத்திற்கு சொந்த நிதியில் இருந்து கறவை மாடு வாங்கிக் கொடுத்துள்ளார் திமுக எம்.எல்.ஏ. அன்பழகன்.
விபத்தில் சிக்கியதால் வேலைக்கு செல்ல முடியாமல் குடும்பத்தலைவன் வீட்டில் முடங்கியுள்ள நிலையில், எம்.எல்.ஏ. அன்பழகன் வழங்கிய கறவை மாடு அந்தக் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு வழியமைத்துக் கொடுத்துள்ளது.
கும்பகோணம் திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் செய்துள்ள இந்த உதவியை கண்டு கிராமமக்கள் நெகிழ்ந்தனர்.

கொரோனா ஊரடங்கு
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தொகுதிகுட்பட்ட புளியஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் சிக்கிய அவர் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கியுள்ளார். இதனால் குடும்பத்தில் வறுமை வாட்டத் தொடங்கியதால் தினக்கூலி வேலைக்கு சென்ற சக்திவேலின் மனைவி குடும்பச் செலவுகளை கவனித்து வந்திருக்கிறார். இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா ஊரடங்கு காரணமாக கூலி வேலையும் இல்லாததால் மளிகைப் பொருட்கள் கூட வாங்க முடியாமல் சக்திவேல் குடும்பம் தவித்துள்ளது.

அன்பழகன் கவனத்திற்கு
இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஒன்றிணைவோம் வா என்ற செயல் திட்டத்தை தொடங்கி வைத்து உதவி தேவைப்படுவோருக்கு தொலைபேசி எண்ணையும் வெளியிட்டிருந்தார் ஸ்டாலின். அந்த எண்ணிற்கு அழைத்த சக்திவேல் தங்கள் குடும்ப நிலையை விவரித்திருக்கிறார். இதையடுத்து ஒன்றிணைவோம் வா ஒருங்கிணைப்பு குழுவினர் இந்த தகவலை கும்பகோணம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

நிவாரண உதவி
அதன் பேரில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் புளியஞ்சேரி கிராமத்தில் உள்ள சக்திவேல் இல்லத்திற்கு சென்ற அன்பழகன் எம்.எல்.ஏ., அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையை கொடுத்திருக்கிறார். அப்போது சக்திவேலின் குடும்ப நிலையை நேரில் அறிந்துகொண்ட அன்பழகன் எம்.எல்.ஏ. நிரந்தர வருவாய்க்கு வழியமைத்து கொடுக்கும் வகையில் கறவை மாடு ஒன்று வாங்கித்தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

கிராம மக்கள் நெகிழ்ச்சி
சக்திவேல் குடும்பத்தினருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ரூ.60,000 மதிப்பில் கன்றும், பசுவும் தமது சொந்த நிதியில் இருந்து வாங்கி அதனை இன்று ஒப்படைத்தார் அன்பழகன் எம்.எல்.ஏ. இந்த நிகழ்வை நேரில் கண்ட புளியஞ்சேரி ஆற்றங்கரை பகுதி மக்கள் நெகிழ்ந்தனர்.












Click it and Unblock the Notifications