தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து - பச்சிளம் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல்
தஞ்சாவூர் அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்து பதற்றத்தை ஏற்படுத்தியது. கர்ப்பிணி பெண்கள் அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கி ஓடி வந்து மைதானத்தில் திரண்டனர் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற
தஞ்சாவூர்: தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரசவ வார்டில் தீ பரவியதால் புகைமூட்டம் ஏற்பட்டதை அடுத்து கர்ப்பிணிகளும், சிறு குழந்தைகளுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் பதற்றமும் பரபரப்பும் தொற்றிக்கொண்டது.
தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் புதிய பிரசவ வார்டு மாடி கட்டிடம் தற்போது தான் கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த மருத்துவமனையில் பிரசவ வார்டில் சுமார் 200 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்காகவும் புதியதாக பிறந்த 50 க்கும் மேற்பட்ட குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குழந்தைகள் நல வார்டில் பின்புறம் மின் அழுத்தம் காரணமாக மின்கசிவு ஏற்பட்டு வயர்கள் பற்றி எரிந்தன. கட்டிடத்திற்குள் புகைமூட்டம் சூழ்ந்ததால் பச்சிளம் குழந்தைகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் பயந்து போன பெற்றோர்கள் குழந்தைகளை தூக்கிக்கொண்டு கீழே இறங்கி ஓடி வந்தனர்.
தீ விபத்து காரணமாக உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதில் அந்த கட்டிட மருத்துவமனை முழுவதும் மின் தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். உடனடியாக குழந்தைகள் மீட்கப்பட்டு வேறொரு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டனர்.
"பட்டியலினம் என்பதால் செருப்பை தூக்க வைத்தேனா.. சாதி பார்த்ததில்லை" ஆம்பூர் திமுக எம்எல்ஏ விளக்கம்
குழந்தைகளும் பிரசவ பெண்களும் மருத்துவமனைக்கு வெளியே வந்து அமர்ந்து சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்தனர் பல பெண்கள் மயங்கிய நிலையிலேயே இருந்தனர். புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவ கல்லூரி முதல்வர் பொறுப்பு மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை பாதுகாப்பாக கட்டிடம் உள்ளதாக தெரிவித்து அவர்களை சமாதானப்படுத்தி மீண்டும் உள்ளே அனுப்பினர். புதிய கட்டிடத்தில் தீ பற்றியதால் மருத்துமனை வளாகம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.