சிறைவாசிகள் விடுதலை.. செப்.10 ரெடியா இருங்க! தலைமை செயலக முற்றுகைக்கு தமீமுன் அன்சாரி அறைகூவல்
தஞ்சாவூர்: ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி செப்டம்பர் 10 ஆம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிடப்போவதாக மனிதநேய ஜனநாயக கட்சி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.
Recommended Video
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் நேற்று கும்பகோணத்தில் பொதுச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் செயல்பாடுகளை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து அக்கட்சியில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அரசியல் பயிலரங்கம் நடத்துவது, மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடத்துவது குறித்தும் வியூகம் அமைக்கப்பட்டது. கட்சி கட்டுப்பாடு, தொண்டர் உணர்வு, முழு நேர ஊழியர் நலன் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
வறுமை ஒழிந்து வளமும் -அமைதியும் -ஒற்றுமையும் செழிக்கட்டும்! தமிமுன் அன்சாரி சுதந்திர தின வாழ்த்து!
சுதந்திர தினம்
இந்தியாவின் 75வது நிறைவு மற்றும் 76ஆவது தொடக்க விழா சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழும் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சி உளப்பூர்வமாக வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறது. ஜனநாயகம், சமூகநீதி சமூக நல்லிணக்கம் ஆகிய உயரிய பண்புகளை பாதுகாக்க அனைவரும் இத்தருணத்தில் உறுதியோடு களமாட வேண்டும் என இச்செயற்குழு அறைகூவல் விடுக்கிறது. மேலும் தமிழகமெங்கும் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை சிறப்பாக கொண்டாடிய அனைத்து கிளைகளுக்கும் , நிர்வாகிகளுக்கும் பாராட்டுகளை இச்செயற்குழு தெரிவித்துக்கொள்கிறது.
சிறைவாசிகள் விடுதலை
10 ஆண்டுகளைக் கடந்து தமிழக சிறைகளில் வாடும் ஆயுள் தண்டனை சிறைவாசிகளை தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் முன் விடுதலை செய்ய வேண்டுமென இச்செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலையை மையப்படுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி எதிர்வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி முன்னெடுக்கும் "தலைமைச் செயலகம் முற்றுகை" போராட்டத்தில் ஜனநாயக சக்திகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் பங்கேற்க செய்வது என இச்செயற்குழு தீர்மானிக்கிறது.
நல்லக்கண்ணுவுக்கு பாராட்டு
இந்திய எல்லையில் நாட்டுக்காக போராடி உயிர் நீத்த தமிழகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் லட்சுமணன் அவர்களின் தியாகத்தை போற்றுவதுடன். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் இச்செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.
முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீரரும், பொதுவுடமை இயக்க தலைவருமான தோழர்.நல்லகண்ணு அவர்களுக்கு சுதந்திர பவள விழாவின் போது "தகைசால் தமிழர்" விருது அளித்து சிறப்பித்த தமிழக அரசுக்கு இச்செயற்குழு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது. இதில் தனக்கு அளிக்கப்பட்ட ரூபாய் 10 லட்சம் அன்பளிப்பை, தனது சொந்த பணம் ரூபாய் ஐந்தாயிரத்தையும் சேர்த்து முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய தோழர் நல்லகண்ணு அவர்களின் தியாகத்தை இச்செயற்குழு பாராட்டுகிறது.
கள்ளக்குறிச்சி மாணவி
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீமதியின் மரணத்திற்கு காரணமான உண்மை குற்றவாளிகளை விரைந்து விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது. மாணவி ஸ்ரீமதியின் பெற்றோருடன் நீதிக்கான போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி துணை நிற்கும் என இச்செயற்குழு தெரிவித்துக்கொள்கிறது.
எரிவாயு கசிவு
சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷனுக்கு(C.P.C.L) சொந்தமான சுத்திகரிப்பு மையத்தில் இருந்து மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எரிவாயு கசிவை தடுக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. மாநில அரசின் ஆய்வு முடிவினை சி.பி.சி.எல் நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாநில அரசையும்,மத்திய அரசையும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
என்.எல்.சி பணி
கடந்த எட்டு ஆண்டுகளாக மோடி அரசு பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து மத்திய அரசின் பதவிகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் தற்போது நெய்வேலி NLC தொழிற்சாலையில் தற்போது தேர்வு செய்யப்பட்டவர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசின் இந்த போக்கை மனிதநேய ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இது போன்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்க மாநில அரசு அழுத்தம் தரவேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
பில்கிஸ் பானு வழக்கு
குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு நடைபெற்ற இணக்கலவரத்தில் சகோதரி. பில்கீஸ் பானு என்ற கர்ப்பிணி பெண் சங் பரிவார கயவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு சிதைக்கப்பட்டார்.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11பேரை தற்போது குஜராத் அரசு விடுதலை செய்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற நீதிக்கு மாறான செயல்கள் தொடர்ந்து நாட்டில் நடைபெற்று வருவதை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
கும்பகோணம் தனி மாவட்டம்
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் கும்பகோணத்தை "தனி மாவட்டமாக" அறிவிப்பேன் என்று கூறினார். அதை உடனடியாக அறிவிக்க இச்செயற்குழு வலியுறுத்துகிறது. கும்பகோணம் தஞ்சை சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது அதை உடனடியாக சரி செய்யவேண்டும் எனவும், கும்பகோணம் மாநகராட்சியில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி நீராதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.