“ஆளுங்கட்சியினரால் என் உயிருக்கு ஆபத்து.. பிரதமரை சந்திப்பேன்” - மதுரை ஆதீனம் பேட்டியால் பரபரப்பு!
தஞ்சாவூர்: தருமபுரம் ஆதீன மடத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப் பிரவேசம் விழாவில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியர் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
இந்த விவகாரத்தில் ஆன்மீகவாதிகள் பலரும் கொந்தளித்த நிலையில், இன்று சட்டப்பேரவையிலும் இதுதொடர்பாக விவாதம் நடந்தது.
இந்நிலையில், ஆளுங்கட்சியினரால் என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
பாஜகவினர்லாம் பேசலாமா.. சட்டசபையிலேயே ஆபாச படம் பார்த்தவர்கள்தானே.. ஜோதிமணி கடும் தாக்கு
பல்லக்கு தூக்கத் தடை
தருமபுரம் ஆதீன மடத்தில் பட்டினப் பிரவேசம் விழாவில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு, மனிதனை மனிதன் சுமக்கக்கூடாது என்ற திராவிடர் கழகத்தின் கோரிக்கையின் பேரில், தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, இந்து அமைப்பினர், ஆன்மீகவாதிகள், பக்தர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்துப் பேசிய மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், நானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பேன் உயிரே போனாலும் பரவாயில்லை எனத் தெரிவித்திருந்தார்.
நானே பல்லக்கு சுமப்பேன்
மதுரை ஆதீனம், "தருமபுர ஆதீன மடத்துக்கு ஆளுநர் வருகை தந்ததுதான் பட்டினப் பிரவேச நிகழ்ச்சி ரத்தானதுக்கு காரணம். உயிரைக் கொடுத்தாவது தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்தை நடத்துவோம். பட்டினப் பிரவேச நிகழ்வை நடத்த அரசு அனுமதி கொடுக்க வேண்டும். தருமபுரம் பட்டினப் பிரவேசத்தை முதல்வரே நேரில் வந்து தலைமை தாங்கி நடத்த வேண்டும். உயிரே போனாலும் பரவாயில்லை. நானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பேன்." எனக் கூறினார்.
சட்டப்பேரவையில் காரசார விவாதம்
இன்று சட்டப்பேரவையில், தருமபுரம் ஆதீன விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். "பாரம்பரியமாக நடந்து வரும் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்குவதற்கு விதித்த தடையை நீக்கவேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அவருக்கு பதிலளித்துப் பேசிய இந்து சமய, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, "பல்லக்கில் தூக்கத் தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் தருமபுரம் ஆதீனத்துடன் பேசி முதலமைச்சர் முடிவெடுப்பார். வரும் மே 22-ஆம் தேதி தான் பல்லக்கு தூக்கும் நிகழ்வு நடக்கிறது.
அதற்குள் பேசி விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். சிலர் தாங்கள் செய்த தவறுக்காக பல்லக்கில் தூக்கத் தடை விதித்ததை அரசியலாக்கப் பார்க்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.
மதுரை ஆதீனம் பேட்டி
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் களிமேட்டில், சமீபத்தில் மின்கம்பி உரசிய விபத்தில் கருகிய அப்பர் பல்லக்கை, மதுரை ஆதீனம் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், "தருமபுரம் பட்டின பிரவேசம் நடைபெறும் என அறிவித்ததால் உன்னால் திருப்பணி செய்ய முடியுமா என என்னை ஆளுங்கட்சியினர் மிரட்டுகிறார்கள். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது.
இதேபோல அச்சுறுத்தல் தொடர்ந்தால் பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து முறையிடுவேன். மதச்சார்பற்ற நாட்டில் ஒரு மதத்திற்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது நல்லதல்ல. ஒரு மதத்தை அழித்து விடலாம் என நினைக்கிறார்களா, அது வெள்ளைக்காரனால் கூட முடியவில்லை." எனத் தெரிவித்துள்ளார்.