இதை செய்தால் நிச்சயமாக தமிழகத்தைக் கைப்பற்றலாம்.. பாஜகவிற்கு மதுரை ஆதீனம் சொன்ன யோசனை
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் பாஜக சிந்தனையாளர்கள் பிரிவு சார்பில் 'தமிழ்நாடு டயலாக் 2023 ஸ்பாட் லைட்' நிகழ்ச்சியில் பேசிய மதுரை ஆதீனம், பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த ஒவ்வொருவரும் 2 ஆயிரம் பேரை பாஜகவில் உறுப்பினராகச் சேர்த்தால், நிச்சயமாக தமிழகத்தைக் கைப்பற்றலாம் என்று பாஜகவிற்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 'தமிழ்நாடு டயலாக் 2023 ஸ்பாட் லைட்' நிகழ்ச்சி பாஜக சிந்தனையாளர்கள் பிரிவு தலைவர் ஸ்ரீஷெல்வி கே.தாமோதர் தலைமையில் நடந்தது. இதில் பாஜக சிந்தனையாளர்கள் பிரிவு மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, பட்டிமன்றப் பேச்சாளர் மணிகண்டன், பாஜக சிந்தனையாளர்கள் பிரிவு பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக சூரியனார்கோயில் வாமதேவ சந்தானம் சிவாக்கிர யோகிகள் ஆதீனம் 28-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பங்கேற்றனர். இதில் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசுகையில், "மனிதனாகிய நாம் நல்ல வாழ்வு வாழவேண்டுமானால் சரியான பாதை, அறநெறியுடன் வாழணும். மனிதன் மேம்பட வேண்டும் என்றால் வழிபாடுகளில் ஈடுபட வேண்டும்.
உலக நாடுகளிலேயே இந்திய வல்லரசாக அடிகோளிட்டது முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தான். அதன் பிறகு தற்போதுள்ள பிரதமர் மோடி, இந்தியாவை உலக அளவில் வல்லரசாக்க பெரும் பங்கு ஆற்றி வருகிறார்.
நம் நாட்டில் அரசு நல்ல முறையில் செயல்பட வேண்டும் என்றால், நாம் வரிகளை முறையாகச் செலுத்த வேண்டும். இன்று பல்வேறு வளர்ந்த நாடுகள் பொருளாதாரத்தில் வீழ்ந்து விட்டது. ஆனால், இந்தியா மட்டும் உயர்ந்த பொருளாதாரத்தில் இருக்கின்றது என்றால், அதற்கு நாம் செலுத்துகின்ற வரியும், இந்தியாவை ஆளும் அரசு வழிநடத்தும் முறை தான் காரணம்.
இந்தியாவிலுள்ள கோயில்கள் சிறப்பாக செயல்பட வேண்டுமானால் அரசியல் ஆளுமைகள் நேர்மையாகவும், சிறந்த சிந்தனையாளர்களாக இருக்க வேண்டும். நாட்டினுடைய தலைமைப் பொறுப்பிலுள்ளவர்கள் சரியான பாதையில், வழியை தேர்ந்தெடுத்தால் மட்டும்தான் இந்த நாடு அனைத்திலும் சூபிட்சம் அடையும். உலக அளவில் இந்துத்துவமும் தழைத்தோங்க வேண்டும் என்றால், வரும் 2024-ம் நாடாளுமன்றத் தேர்தலில் குடும்பத்துடன் யாருக்கு மலரிட வேண்டுமோ அவர்களுக்கு மலரிடுங்கள்" இவ்வாறு கூறினார்.
மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பேசுகையில், "இந்தியாவில் ஆட்சி செய்த பிரதமர்கள் ஒருவருக்கு கூட தமிழ் உணர்வு கிடையாது. ஆனால் தற்போதுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு மட்டும் தான் தமிழ் உணர்வு இருக்கிறது. பிரதமர் மோடி கங்கை, காசி, அயோத்தி ஆகிய இடங்களில் கோயில்களும், புதிய நாடாளுமன்றத்தையும் கட்டி இருக்கிறார். இலங்கையில் வீடு இழந்தவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார். நமது நாட்டிற்கு நல்ல பிரதமர் நரேந்திர மோடி கிடைத்துள்ளார். அவரது கரத்தை வலுப்படுத்த ஒவ்வொருவரும் 2 ஆயிரம் பேரை பாஜகவில் உறுப்பினராகச் சேர்த்தால், நிச்சயமாக தமிழகத்தைக் கைப்பற்றலாம்" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications