அப்படியே திருப்பதி மாதிரி.. 3 கோயில்களில் வரும் ஆன்லைன் முன்பதிவு தரிசனம்.. சேகர்பாபு குட் நியூஸ்!
தஞ்சாவூர்: திருப்பதியை போல் திருவண்ணாமலை, திருச்செந்தூர் மற்றும் பழனி ஆகிய கோயில்களில் பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அதேபோல் சுவாமி மலையில் லிப்ட் அமைக்கும் பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று கூறிய அவர், பழனியில் மேலும் ஒரு ரோப் கார் வசதி செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டின் திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட கோயில்களுக்கு வருகை தருவோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இதனால் சபரிமலை, திருப்பதி கோயில்களை போல் ஆன்லைன் முன்பதிவு தரிசன வசதியை கொண்டு வரவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு இது தொடர்பாக முக்கிய தகவலை கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின் நடைபெறும் 3 ஆயிரமாவது குடமுழுக்கு நாகை மாவட்டம் திருப்புகலூர் அக்னீஸ்வர சுவாமி கோயிலில் விமர்சையாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு சுவாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சேகர்பாபு பேசுகையில், தமிழ்நாட்டில் 4 ஆயிரம் கோயில்களில் கும்பாபிஷேகம் செய்வது தான் இலக்கு.
கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 4 ஆயிரம் கோயில்களில் தான் திருப்பணிக்கு எடுத்து கொண்டார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பின், 10 ஆயிரம் கோயில்களில் திருப்பணிகள் நடந்து கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தற்போது 3 ஆயிரமாவது கும்பாபிஷேக திருப்புகலூரில் நடைபெற்றுள்ளது. கோயில்களின் பராமரிப்பிற்கும் கோயில் பொக்கிஷங்களை பாதுகாக்கவும் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து நிதி ஒதுக்கி வருகிறார்.
திருப்பதியில் முன்பதிவு செய்து தரிசனம் செய்வதை போல் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களிலும் ஆன்லைன் முன்பதிவு தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி ஆகிய கோயில்களில் ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்து தரிசனம் செய்யும் வசதி விரைவில் கொண்டு வரப்படும். இதற்கான தொடக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
விரைவில் முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பார். சுவாமி மலையில் லிப்ட் அமைக்கும் பணி வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். திருக்கழுகுன்றம், திருப்பரங்குன்றம் கோயில்களுக்கு புதிய ரோப் கார் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும். பக்தர்கள் வசதிக்காக பழனி மலையில் மேலும் ஒரு ரோப் காப் சேவை அமைக்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications