தர்மயுத்தம் செய்தது தவறு.. அதை ஓபிஎஸ் உணர்ந்துவிட்டார்.. டிடிவி தினகரன் சொன்ன வார்த்தை!
தர்மயுத்தம் நடத்தியது தவறு என்பதை ஓபிஎஸ் உணர்ந்துள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்: தர்மயுத்தம் நடத்தியது தவறு என்பதை ஓபிஎஸ் உணர்ந்துள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மக்களை சமாளிக்க போடப்பட்ட பட்ஜெட்டாக தெரிவதாக கூறிய டிடிவி தினகரன், ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வு ஊதியத்திட்டம் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை என்று விமர்சித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஓபிஎஸ் முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால் திடீரென முதலமைச்சர் பதவியில் இருந்து விலகிய ஓபிஎஸ், சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தத்தை தொடங்கினார்.
இதன்பின்னர் டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்தார். இதன் பின்னர் நான்கு ஆண்டுகள் துணை முதலமைச்சராக ஓபிஎஸ் பதவி வகித்தார்.

அதிமுக விவகாரம்
இதன் பின்னர் அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில், அக்கட்சியில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வந்தது.

டிடிவி தினகரன் பேட்டி
இதனைத் தொடர்ந்து அண்மையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து ஓபிஎஸ் கூறுகையில், வாய்ப்பு இருந்தால், காலத்தின் கட்டாயம் என்றால் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன் என்று தெரிவித்தார். இந்த நிலையில் தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், இரட்டை இலை எடப்பாடி பழனிசாமி கையில் இருக்கும் வரை கட்சி செல்வாக்கை இழந்து கொண்டே வரும்.

தர்மயுத்தம் தவறு
கடந்த 2017ஆம் ஆண்டு ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்தியது தவறு என்று உணர்ந்துள்ளார். ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறுகிறார். அதுதான் எங்களின் கருத்து. மேற்கு மண்டலம் எங்களது கோட்டை என எடப்பாடி பழனிச்சாமி கூறிவந்த நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவிடம் படுதோல்வி அடைந்துள்ளார்.

மக்களை சமாளிக்க போடப்பட்ட பட்ஜெட்
இரட்டை இலை சின்னம் இருந்தும், படுதோல்வி அடைந்து அதிமுக பலவீனம் அடைந்துள்ளது என நினைக்கத் தோன்றுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக வரும் 24ஆம் தேதி வரக்கூடிய நீதிமன்ற தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை என்னால் கூற முடியாது என்று தெரிவித்தார். தொடர்ந்து பட்ஜெட் பற்றிய கேள்விக்கு, மக்களை சமாளிக்க போடப்பட்ட பட்ஜெட்டாக தெரிகிறது. ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வு ஊதியத்திட்டம் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications