எங்கள் பலமே கூட்டணிதான்.. கொள்கை எதிரிகளை வீழ்த்தும் கட்டாயத்தில் உள்ளோம் - அன்பில் மகேஷ் ஓபன்
சென்னை: 10 ஆண்டுகளாக கூட்டணியாகதான் உள்ளோம், எங்களது பலமே கூட்டணிதான். கொள்கை எதிரிகளை எதிர்க்க வேண்டிய மிகப்பெரிய கட்டாயம் நமக்கு உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 2025 ஆம் ஆண்டிற்கான ஜூனியர் ஹாக்கி ஆண்களுக்கான உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிகளுக்கான அறிமுக நிகழ்ச்சி தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு திடலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: "தமிழகத்தில் அனைவருமே கூட்டணியாகத்தான் உள்ளனர். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக கூட்டணியாகதான் பயணித்து வருகிறோம். எங்களது பலமே கூட்டணிதான். கருத்துகள், கொள்கைகள் மாறுபட்டாலும் திமுக கூட்டணி பலமாகத்தான் உள்ளது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துகள், கொள்கைகள் கொண்டவர்களாக இருந்தாலும் பொது எதிரியாக இருக்கக்கூடிய, கொள்கை எதிரியாக இருக்கக்கூடியவர்கள் யார் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்.
அவர்களை எதிர்க்க வேண்டிய மிகப்பெரிய கட்டாயம் நமக்கு உள்ளது. அதனால், ஒற்றுமையாக தோழமை உணர்வோடு, எங்களது வெற்றிக் கூட்டணி பலத்திற்கான வெற்றியாகதான் பார்ப்போம். விஜய்யிடம் கூட்டணி குறித்து ராகுல் காந்தி பேசியது தொடர்பாக அவரிடம்தான் கேட்க வேண்டும்.
மழைக்காலம் என்றாலே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பள்ளிகளில் தண்ணீர் தேங்கக் கூடாது. அப்படி தேங்கினால் உடனடியாக தண்ணீரை வெளியேற்ற வேண்டும். கிணறுகள் மூடப்படாமல் இருந்தால் உடனடியாக மூட வேண்டும். மின்கசிவு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications