தஞ்சை சுவாமிமலை சார்பதிவாளர் ஆபீசில் சிக்கிய பத்மாஸ்ரீ.. வில்லங்க சான்று தந்தவருக்கே வில்லங்கம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கபிஸ்தலத்தைச் சேர்ந்த சிவராஜ் என்ற விவசாயி வில்லங்க சான்று கேட்டு சுவாமிமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இவரிடம் சுவாமிமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் தலைமை எழுத்தராக பணியாற்றும் பத்மாஸ்ரீ என்பவர் வில்லங்க சான்று தர ரூ.1500 லஞ்சம் கேட்டாராம். இந்த விவகாரத்தில் புகாரின் பேரில் ரசாயண நோட்டுகளுடன் கையும் களவுமாக பெண் ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை கையும் களவுமாக பிடிக்கவே ஒவ்வொரு மாவட்டத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் செயல்பட்டு வருகிறது. உங்கள் ஊரில் விஏஓ, தாசில்தார், சர்வயேர், சார்பதிவாளர், எழுத்தர், உதவியாளர், ஆர்டிஏ, மாநகராட்சி அதிகாரி, மின்வாரிய அதிகாரி என தமிழக அரசு துறையில் உள்ள எந்த அரசு அதிகாரியாவது தங்களது கடமையை செய்ய லஞ்சம் கேட்டால், ஆடியோ ஆதாரத்துடன் அல்லது வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்.

சொத்துக்கள் ஆய்வு
புகார்களை ஆய்வு செய்யும் லஞ்ச ஒழிப்பு போலீசார், அவர்களை கையும் களவுமாக பிடிக்க ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்து அனுப்புவார்கள். அரசு அதிகாரிகள் லஞ்சப்பணத்தை வாங்கும் போது மறைந்திருந்து கையும் களவுமாக அவர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடிப்பார்கள். அத்துடன் அவர்களை கைது செய்வார்கள். அவர்களின் சொத்துக்களை ஆய்வு செய்வார்கள்.
24 மணி நேரத்தில் சஸ்பெண்ட்
ஏராளமான சொத்துக்கள், பணம் வருமானத்திற்கு மீறி இருந்தால் அதற்கும் வழக்கு பதிவு செய்வார்கள். அத்துடன் லஞ்ச வழக்கில் கைதானால் 24 மணி நேரத்தில் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். இதுதான் தற்போது உள்ள நடைமுறையாகும். இது போல் கையும் களவுமாக பல அதிகாரிகள் கடந்த ஓராண்டில் மட்டுமே சிக்கியுள்ளனர். அந்த வரிசையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு எழுத்தர் சிக்கியுள்ளார்.
வில்லங்க சான்று
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கபிஸ்தலத்தைச் சேர்ந்த 59 வயதாகும் சிவராஜ் என்ற விவசாயியான இவர் வில்லங்க சான்று கேட்டு சுவாமிமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருக்கிறார். அங்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் தலைமை எழுத்தர் பத்மாஸ்ரீ என்பவர் வில்லங்க சான்று வழங்க தனக்கு ரூ.1500 லஞ்சம் தர வேண்டும் என்று சிவராஜிடம் கேட்டாராம்.
500 ரூபாய்க்காக பிடிவாதம்
அதற்கு விவசாயி சிவராஜ் தன்னிடம் ரூ.1500 இல்லை என்பதால் ரூ.1000 மட்டும் கொடுத்திருந்தாராம். ஆனால் மீதம் ரூ.500 கொடுத்தால்தான் வில்லங்க சான்று வழங்குவேன் என பத்மாஸ்ரீ பிடிவாதமாக கேட்டாராம். அத்துடன் பலமுறை சிவராஜை அலைய விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த விவசாயி சிவராஜ் இது குறித்து தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
தலைமை எழுத்தர் பத்மாஸ்ரீ கைது
அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார், சிவராஜிடம் ரசாயனம் தடவிய ரூ.500 நோட்டை கொடுத்து அனுப்பி விட்டனர். அவரை பின் தொடர்ந்து சென்றனர். அப்போது ரூ.500 நோட்டை தலைமை எழுத்தர் பத்மாஸ்ரீயிடம் சிவராஜ் கொடுத்திருக்கிறார். அதற்கு பத்மாஸ்ரீ தனக்கு உதவியாளராக செயல்படும் மகாலிங்கம் என்பவரிடம் கொடுக்குமாறு கூறினாராம். அவரிடம் ரூ.500 நோட்டை சிவராஜ் கொடுத்த போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பத்மாஸ்ரீ மற்றும் மகாலிங்கம் இருவரையும் கையும், களவுமாக பிடித்தார்கள். இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்தி தலைமை எழுத்தர் பத்மாஸ்ரீ மற்றும் அவருக்கு உதவியாக செயல்பட்ட மகாலிங்கம் ஆகிய இருவரையும் கைது செய்தார்கள்.












Click it and Unblock the Notifications