ஏழைகளை காலி செய்து பேருந்து நிலையமா? கொந்தளித்த பட்டுக்கோட்டை மக்கள் - ஒதுங்கிய எம்.எல்.ஏ. அண்ணாதுரை
தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில் பொதுமக்கள் வசித்து வரும் இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து எம்எல்ஏவிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை புறவழிச்சாலை பகுதியில் உள்ள வாவு தோப்பு பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வாவு தோப்பு அருகே சத்திரம் நிலம் அதிக அளவில் உள்ளதால் 99 வருட குத்தகையில் இந்த இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் மாநில அரசும் ரூ.25 கோடி நிதி ஒதுக்கிய நிலையில் அந்தப் பகுதியில் குடியிருந்து வரும் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அப்பகுதி நகராட்சி கவுன்சிலர் ராதிகா தலைமையில் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. அண்ணாதுரையை சந்தித்து பேருந்து நிலையத்தை வாவு தோப்பு பகுதியில் அமைக்காமல் வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அப்போது பேசிய பட்டுக்கோட்டை திமுக எம்எல்ஏ அண்ணாதுரை நிதி பெற்றுக்கொடுப்பது மட்டுமே தனது பணி என்று கூறினார்.
பேருந்து நிலையம் அமைப்பதும், அமைக்காததும் நகர்மன்றத் தலைவர் எடுக்கும் முடிவை பொறுத்தது எனவும், இதற்குமேல் பேருந்து நிலையம் தொடர்பான தங்களது கோரிக்கையை நகர்மன்றத் தலைவரை சந்தித்து முறையிட்டுக்கொள்ளுங்கள் எனக்கூறி ஒதுங்கிக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து வாவு தோப்பு மக்கள் நகர்மன்றத் தலைவர் சண்முகப்பிரியாவை சந்தித்து முறையிட்டனர். இதற்கு முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் வாவுதோப்பு பகுதி மக்கள் முறையிட்ட போது அவர் ஆராய்ந்து முடிவு செய்வதாக கூறி சென்றார் குறிப்பிடத்தக்கது.