3 பைக்கில் வந்த கும்பல்.. சரமாரி வெட்டு.. தனியாக விழுந்த தலை.. பட்டுக்கோட்டையில் பயங்கரம்
ஜாமீனில் வெளிவந்தவர் நடுரோட்டில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
தஞ்சாவூர்: ஜாமீனில் இருந்து வெளியே வந்த இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று கொடூரமாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பியுள்ளது. பட்டப்பகலில் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற இந்த சம்பவம் பரபரப்பு நிறைந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பட்டுகோட்டையை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதியன்று சாந்தாங்காடு கிராமத்தை சேர்ந்த சம்பான் கார்த்தி என்பவரை அடித்து கொலை செய்துவிட்டார்.

சமீபத்தில் ஜாமீன்
இந்த கொலையில் மேலும் 6 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். ஆனாலும் இதில் பிரதான குற்றவாளியே பிரகாஷ்தான். அதனால் 7 பேருமே கைது செய்யப்பட்டு, தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளனர். அதனால் தினமும் பட்டுக்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் சென்று கையெழுத்து போட்டுவிட்டு வர வேண்டும். அதன்படியே 7 பேரும் சென்று கையெழுத்து போட்டு வருகின்றனர்.

வழிமறித்த கும்பல்
அப்படித்தான் இன்றும் கையெழுத்து போட 7 பேரும் 4 பைக்கில் கிளம்பினார்கள். கையெழுத்தும் போட்டுவிட்டு வீட்டுக்கு மதியம் திரும்பி வந்து கொண்டிருந்தனர். பட்டுக்கோட்டை-தஞ்சாவூர் சாலையில் அவர்கள் வந்தபோது, அவர்களுக்கு பின்னாடியே 3 பைக்குகளில் வந்த ஒரு கும்பல் இவர்கள் 7 பேரின் பைக்குககளை வழிமறித்தது.

தலைதெறிக்க ஓடினர்
அவர்களை கண்டதும் 7 பேருக்கும் தூக்கி வாரி போட்டது. அதனால் பதட்டமானார்கள். அந்த நேரம் பார்த்து மர்ம கும்பல் கையிலிருந்து நாட்டு வெடிகுண்டை அவர்கள் மீது வீசியது. இதை பார்த்ததும் இன்னும் அதிர்ச்சியடைந்து, பைக்கை விட்டு 7 பேரும் அலறியடித்து கொண்டு தலைதெறிக்க ஓடினார்கள்.

தலை துண்டிப்பு
ஆனாலும் மர்மகும்பல் அவர்களை விடவே இல்லை. தொடர்ந்து விரட்டியது. எல்லோரும் உயிரை கையில் பிடித்து கொண்டு தப்பித்து ஓட, முக்கிய குற்றவாளியான பிரகாஷ் என்பவர் மட்டும் சிக்கி கொண்டார். அவரை அந்த கும்பல் சரமாரியாக வெட்டி சாய்த்தது. அவரது தலையை தனியாக துண்டித்து எடுத்து தஞ்சாவூர் சாலையில் போட்டுவிட்டு தப்பியது.

விரைந்து விசாரணை
இது எல்லாமே இன்று மதியம் பொதுமக்கள் முன்னிலையிலேயே நடுரோட்டில் நடந்தது. இதை பார்த்த மக்களும் சிதறி ஓடினார்கள். அதில் ஒருசிலர் போலீசாருக்கு தகவல அளிக்க, அவர்களும் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications