பொன்னியின் செல்வன்.. ராஜராஜ சோழனின் சதய விழா.. விழாக்கோலம் பூண்ட தஞ்சை!
தஞ்சாவூர்: மாமன்னர் ராஜராஜ சோழனின் 1037-வது சதய விழா இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டநிலையில் இன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனின் பிறந்த நாள் ஐப்பசி சதய விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
நடப்பு ஆண்டில் இதற்காக கடந்த மாதம் 25-ஆம் தேதி தஞ்சை பெரிய கோவிலில் பந்தக்கால் முகூர்த்த விழா நடந்தது.
ராஜராஜ சோழனின் 1037வது சதய விழா.. விழாக்கோலம் பூண்ட தஞ்சை பெரிய கோயில்
தஞ்சை பெரிய கோவில்
மூவேந்தர்களில் ஒருவரான சோழர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது தஞ்சை பெரிய கோவில். தமிழகர்களின் கட்டட கலைக்கும், சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக இந்த கோவில் இன்றளவும் திகழ்ந்து வருகிறது. கிபி 1003 முதல் 1010- ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டு கட்டட கலைக்கு சான்றாக திகழ்ந்து வரும் இந்த கோவிலை கட்டியவர் தான் ராஜ ராஜ சோழன். இவரை பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பந்தக்கால் நடப்பட்டு..
அதன்படி நடப்பு ஆண்டுக்கான ராஜராஜ சோழன் சதய விழாவிற்காக கடந்த மாதம் 25-ஆம் தேதி கோவிலில் பந்தக்கால் நடப்பட்டது. பால், மஞ்சள், சந்தனத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு பந்தக்கால் நடப்பட்டது. தொடர்ந்து 2-ம் தேதியான நேற்று கோவில் வளாகத்தில் ஆன்மிக சொற்பொழிவு, கவியரங்கம், பரிசளிப்பு விழா ஆகியவை நடைபெற்றது. இந்த நிலையில், 3-ம் தேதியானை இன்று கோவிலில் காலை தேவார நூலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
மரியாதை செலுத்துகின்றனர்
தொடர்ந்து ஓதுவார்களின் வீதியுலா நடைபெற்றது. இதனையடுத்து கோவிலுக்கு வெளியில் உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு கோயில் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சியினர் வருகை புரிந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். தொடர்ந்து கோவிலில் பெருவுடையார் மற்றும் பெரிய நாயகி அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனை செய்யப்படும்.
மின்னொளியில் ஜொலிக்கிறது
பின்னர் இரவு ராஜராஜன் மற்றும் உலகமாதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெறும். முன்னதாக ராஜ ராஜ சோழனின் 1037-வது ஆண்டு சதய விழாவை முன்னிட்டு தஞ்சை நகரம் முழுவதும் மாநகராட்சி சாரிபில் கோவில் வளாகம், உட்புற வளாகம், நகரம் உள்பட பல இடங்களில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டன. இதனால் அந்த நகரம் முழுவதும் மின்னொளியில் ஜொலித்து வருகிறது. ஏராளமானோர் அங்கு திரண்டிருப்பதால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.
இன்று உள்ளூர் விடுமுறை
இதேபோல் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் கோவிலுக்கு வந்துள்ளதால் அவர்களுக்கு தங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விமரிசையாக கொண்டாடப்படாத நிலையில் தற்போது நடப்பு ஆண்டில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்ட நிலையில் இன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.