ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்! இனி நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய்யுடன் புது வரவு!
தஞ்சை: ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்யுடன் கடலை எண்ணெய்யையும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். ஏற்கெனவே பாமாயில் விற்கப்பட்டு வரும் நிலையில் அதற்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் மக்கள் மத்தியில் உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஈச்சங்கோட்டையில் கோத்ரெஜ் குழுமம் சார்பில் பாமாயில் பனை விவசாயிகளுக்கான தீர்வு மையம் அண்மையில் நடந்தது. இந்த மையத்தில் விவசாயிகளுக்கு தேவையான பாமாயில் பனைச் செடிகள், உரங்கள், பராமரிப்பு கருவிகள், எண்ணெய் பனை விதையை கொள்முதல் செய்வது ஆகியவற்றை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தொடங்கி வைத்தார்.

அவர் பேசியதாவது: விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்காக டெல்டா பகுதிகளில் விவசாயம் சார்ந்த தொழில்கள், விவசாய பொருள்கள் மூலம் மதிப்பு கூட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படவுள்ளது.
சிறுகுறு விவசாயிகள் அரசிடம் கடன் பெறாமல் வருமானத்தை சேமிக்கும் வகையில் உற்பத்தியை அதிகரித்து வருவாயை பெருக்க வேண்டும். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் நெல், கரும்பு, பாமாயில், தேங்காயை மதிப்பு கூட்டும் பொருள்களாக மாற்ற வேண்டும். இந்தியாவில் 22 சதவீதம் பாமாயில் உற்பத்தி செய்யப்படுகிறது.
வெளிநாட்டில் இருந்து 60 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. பாமாயிலுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது. இருப்பினும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய்யை நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
ரேஷன் கார்டு என்பது தமிழக அரசால் கொடுக்கப்படும் ஒரு அட்டை. இதன் மூலமே பொருளாதார அடிப்படையில் மக்கள் பிரிக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அனைத்து குடும்பங்களுக்கும் அத்தியாவசிய தேவையான அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு உள்ளிட்டவை குறைந்த விலையில் ரேஷன் கார்டு மூலம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும் உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்கவும் பாமாயில் இறக்குமதி ஒப்பந்த புள்ளியை ரத்து செய்துவிட்டு தேங்காய் எண்ணெய் கொள்முதலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். அத்துடன் ரேஷன் கடைகளிலும் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும் என தேங்காய் விவசாயிகள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
கேரளா,கர்நாடகா, தமிழக தென்னை விவசாயிகள் மத்திய அரசிடம் கொள்முதல் செய்த கொப்பரையை வெளிமார்க்கெட்டில் விற்கக் கூடாது என்பதுடன் தேங்காய் எண்ணெய்யை ரேஷன் கடைகள் மூலம் உடனடியாக விற்பனை செய்ய கோரிக்கை எழுந்துள்ளது. அது போல் நல்லெண்ணெய்யையும் மக்களுக்கு வழங்கினால் சிறு குறு எண்ணெய் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
அது போல் ரேஷன் கடைகளில் கேழ்வரகு, சிறுதானிய வகைகளையும் கொடுக்க வேண்டும் என்றும் சிறு தானியங்கள் மக்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கிறது என்றும் அரிசி கேட்போருக்கு அரிசியையும் சிறுதானியம் கேட்போருக்கு சிறுதானியங்களையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது எல்லாவற்றுக்கும் மேலாக ரேஷன் பொருட்களை வீட்டுக்கே கொண்டு வந்து கொடுக்கும் திட்டத்தை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. நலத்திட்ட உதவிகளுக்கு டோக்கன் கொடுப்பதை போல் ரேஷன் பொருள்களையும் மாதாமாதம் கொடுத்தால் நன்றாகவே இருக்கும் என்கிறார்கள். அது குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதுதான் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications