மதநல்லிணக்க மண்ணாக திகழும் தஞ்சை... கோயில் திருவிழாவில் இந்துக்களுக்கு மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்
தஞ்சாவூர்: ஒரத்தநாட்டில் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு வெயிலுக்கு இதமாக இஸ்லாமியர்கள் மோர், விசிறி உள்ளிட்டவற்றை வழங்கியது அங்கு வந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.
Recommended Video
நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சாவூரில் எம்மதமும் சம்மதம் என்ற அடிப்படையில் அனைத்து மதத்தினரும் சமத்துவத்தோடு பழகி வருகின்றனர்.
நாடு முழுவதும் மதவாத மோதல்கள், வன்முறைகள், இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள், மாட்டுக்காக மனிதர்கள் அடித்துக் கொல்லப்படுவது, கும்பல் தாக்குதல்கள் போன்றவை பெருகிக்கொண்டு இருக்கின்றன.

தனித்து நிற்கும் தமிழ்நாடு
அண்டை மாநிலமான கர்நாடகம் வரை இத்தகைய வகுப்புவாத வன்முறைகள் அதிகரித்துவிட்ட நிலையிலும், தமிழ்நாடு தனித்து நின்று மதநல்லிணத்துக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு பல உதாரணங்களை இங்கு எடுத்துக் காட்டலாம். ஆங்காங்கே சில ஏற்க முடியாத நிகழ்வுகள் அரங்கேறினாலும் எங்கள் ஒற்றுமையை குலைக்க முடியாது என்று தமிழர்கள் அவ்வப்போது நிரூபித்துக் காட்டிவிடுகிறார்கள்.

மதநல்லிணக்க மண் தஞ்சாவூர்
குறிப்பாக தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார டெல்டா பகுதிகளில் மத நல்லிணக்கம் என்பது மற்ற பகுதிகளைவிட அதிகம் எனலாம். அவரவர் அவரவருக்கு விருப்பமான மதங்களை பின்பற்றினாலும், அதை கொண்டு தங்களுக்குள் பகைமை பாராட்டிக்கொள்ளாமல் ஒற்றுமையோடு வாழ்ந்து வருகிறார்கள். அதை பறைசாற்றும் வகையிலான சம்பவம் தஞ்சாவூரின் ஒரத்தநாடு பகுதியில் நடந்து இருக்கிறது.

ஒரத்தநாடு கோயில் திருவிழா
ஒரத்தநாடில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்திப் பெற்ற காசி விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விசுவநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இது சரபோஜி மன்னர் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமைவாய்ந்த ஆலயமாகும். இந்த கோயிலும் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஒரத்தநாடு மற்றும் சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பக்தர்களுக்கு மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்
வெயில் அதிகம் காணப்பட்டதால் குடமுழுக்கு விழாவிற்கு வருகைதந்த பக்தர்கள் கலைப்போடு காணப்பட்டனர். அவர்களுக்கு ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த இஸ்லாமிய ஜமாத்தார்கள் ஒன்றிணைந்து விசிறி,மோர் உள்ளிட்டவற்றை வழங்கி களைப்பாற்றினர். இதனை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் கண்டு நெகிழ்ச்சியடைந்தனர்.

பள்ளிவாசல் திருவிழாவுக்கு இந்துக்கள் பேனர்
இதேபோல் கடந்த வெள்ளிக்கிழமை தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே மந்திரிப்பட்டினத்தில் முஹைதீன் (மஸ்ஜிதுல் அமீன்) என்ற பெயரில் ஜும்மா பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு வருகை தந்த பொதுமக்களை வரவேற்பதற்காக சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்து இந்து மக்கள் பேனர்களை வைத்திருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

போராட்டத்தில் காவடிக்கு வழிவிட்ட இஸ்லாமியர்கள்
அதேபோல் கடந்த மார்ச் மாதம் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ஹிஜாப் தீர்ப்புக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள், அவ்வழியே சென்ற பங்குனி உத்திர காவடி ஊர்வத்திற்கு பாதுகாப்பாக வழிவிட்டு மதநல்லிணக்கத்தை காட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் வெகுவாக பகிரப்பட்டு பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications