மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.. ஒன்று கூடிய வருவாய்த்துறை அலுவலர்கள்.. அரசுக்கு பறந்த கோரிக்கை
தஞ்சை : புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வருவாய்த்துறை அலுவலர் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. அரசு துறைகளில் காலியாக உள்ள 3 லட்சத்திற்கு மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்பிடவும், சரண் விடுப்பை ஒப்படைப்பு செய்து பணமாக்கும் நடைமுறையை மீண்டும் அமல்படுத்திட வேண்டும் என்று வருவாய்துறை அலுவலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் இடையே பழைய ஓய்வூதிய திட்டம் மிக முக்கிய கோரிக்கையாக பல ஆண்டுகளாக இருக்கிறது. ஆனால் இதை செயல்படுத்த முடியாது என்று கடந்த அதிமுக ஆட்சியில் கூறினார்கள். அதேபோல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னருமே இதே பதில் தான் வந்தது. இதுபற்றி நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையிலேயே ஒரு முறை தெளிவுப்படுத்தினார். அதன்பிறகுதங்கம் தென்னரசு நிதியமைச்சராகிய நிலையில் இப்போதும் அதேநிலை தான் உள்ளது.

தற்போதைய சூழலில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தும் அளவிற்கு தமிழகஅரசின் நிதி நிலை சீராக இல்லை என்றே ஆளும் தரப்பு கூறிவருகிறது. எனினும் மத்திய அரசு அமல்படுத்தி உள்ள புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியம் அமலுக்கு வருமா என்பதும் தெரியவில்லை.. இதுபற்றி ஆராய குழு அமைக்கப்படடுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் இந்த விவகாரத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்கள். அந்த வகையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வருவாய்த்துறை அலுவலர் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட செயற்குழு கூட்டம் மகளிர் அணி தலைவர் கலைச்செல்வி தலைமையில் நடந்த முடிந்தது.இதில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் மாநில பொதுச்செயலாளர் சுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின் வருமாறு:- தஞ்சை மாவட்டத்தில் ரெகுலர் தாசில்தார்களாக ஏற்கனவே பார்த்தவர்களே தொடர்ந்து 2-வது முறையாகவும், 3-வது முறையாகவும் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். ரெகுலர் தாசில்தார் பார்க்காதவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து சங்கத்தின் சார்பில் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு ெகாண்டு சென்றும் மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வருத்தமளிப்பதாகும் என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளது. மேலும் ஆய்வு கூட்டங்களை விடுமுறை நாட்களிலும், அலுவலக நேரம் முடிந்தபிறகும் நடத்தப்படுவதை தவிர்க்க மாவட்ட நிர்வாகத்தை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
பணிகாலத்தில் மரணம் அடையும் அரசு பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வழங்கப்பட்டு வந்த 25 சதவீதத்தை 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. முன்பு இருந்ததுபோல் இதை 25 சதவீதமாக உயர்த்திட வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திடவும், அரசு துறைகளில் காலியாக உள்ள 3 லட்சத்திற்கு மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்பிடவும், சரண் விடுப்பை ஒப்படைப்பு செய்து பணமாக்கும் நடைமுறையை மீண்டும் அமல்படுத்திட தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications