மு.க.ஸ்டாலின் புகழ் பாடிய சசிகலா தம்பி... தஞ்சை திருமண விழாவில் திவாகரன் பேச்சு
Recommended Video
தஞ்சை: திராவிட இயக்கங்களை கட்டிக்காக்கும் ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே என தஞ்சையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் மன்னார்குடி திவாகரன் தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் உடன் பிறந்த சகோதரரான திவாகரனின் இந்தப் பேச்சு திருமண அரங்கில் இருந்தவர்களுக்கே பெரும் வியப்பையும், ஆச்சரியத்தையும் அளித்தது.
மேலும், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெற்ற வெற்றிகள் ஒரு சில இடத்தில் தட்டிப்பறிக்கப்பட்டுள்ளதாகவும், இல்லையெனில் திமுகவுக்கே முழு வெற்றி கிட்டியிருக்கும் எனவும் திவாகரன் கூறினார்.
கட்சியில் களையெடுப்பை தொடங்கும் ஸ்டாலின்... விரைவில் நிகழவுள்ள மாற்றங்கள்
எஸ்.எஸ்.பி. இல்ல விழா
முன்னாள் மத்திய அமைச்சரும், தஞ்சை தொகுதி எம்.பி.யுமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் இல்லத் திருமண விழா தஞ்சாவூரில் இன்று நடைபெற்றது. அந்த திருமண விழாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். மேலும், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், துணைச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே.என்.நேரு, சசிகலாவின் தம்பி திவாகரன், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் மணவிழாவில் சிறப்புரை ஆற்றினர். அதில் திவாகரன் ஆற்றிய உரைதான் நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்திருந்தது.
நலம் விசாரிப்பு
திருமண விழாவிற்கு வந்திருந்த திவாகரன் மேடைக்கு கீழே உள்ள முன் வரிசையில் அமர்ந்திருக்கிறார். அவரை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மேடையேறி வருமாறு அழைத்து உதயநிதி ஸ்டாலின் அருகே இருக்கை அமைத்து கொடுத்தார். அப்போது ஸ்டாலின், உதயநிதி ஆகியோருக்கு திவாகரன் வணக்கம் கூறியதோடு பரஸ்பர நலம் விசாரித்தார். பற்றாகுறைக்கு கே.என்.நேருவும் திவாகரனை கலாய்த்து அங்கு கலகலப்பை ஏற்படுத்தினார். மேடையில் நடந்த இந்த நிகழ்வை கீழே அமர்ந்து பார்த்தவர்களுக்கு பெரும் வியப்பை தந்தது. ஸ்டாலினை அண்ணன் என்றே திவாகரன் அழைத்தார்.
ஒரே தலைவர்
மணமக்களை வாழ்த்திப் பேசிய திவாகரன் அப்படியே அரசியலுக்குள் நுழைந்தார். ரஜினியை சீண்டும் வகையில் ஒரு கருத்தை அங்கு பதிவு செய்தார். கர்நாடகாவில் இருந்து வந்த ஒருவர் தந்தை பெரியாரை பற்றி இழிவாகப் பேசுகிறார் எனத் தெரிவித்தார். மேலும், திராவிட இயக்கங்களை கட்டிக்காக்கும் ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே என புகழாரம் பாடினார். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக தான் முழுமையான வெற்றி பெற்றிருக்கும் என்றும், ஒரு சில இடங்களில் திமுக பெற்ற வெற்றி தட்டிப்பறிக்கப்பட்டது எனவும் கூறினார். திவாகரன் பேச்சை மிகவும் கவனமுடன் கவனித்தனர் மேடையில் இருந்த திமுக முன்னோடி நிர்வாகிகள்.
பகைமையில்லை
இது குறித்து திருமண விழாவில் பங்கேற்றவரும், சசிகலாவின் உறவினருமான ஒருவரிடம் பேசிய போது, திவாகரனை பொறுத்தவரை யாரிடமும் பகைமை காட்டாமல் நட்பு பாராட்ட வேண்டும் என நினைப்பவர். அவர் அவரது மாமா மறைந்த நடராஜனை போல் பெருந்தன்மையாக நடந்துகொள்ள கூடியவர். சபை நாகரீகம் கருதியே அவர் பேசியிருப்பார் என நினைக்கிறேன். மற்றபடி திவாகரன் பேச்சில் எந்த உள்நோக்கமும் இருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்தார். இதனிடையே அவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து பேசிக்கொண்டது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.