மன்னிப்பு கேட்டார்கள் விட்டுவிட்டேன்; இல்லையென்றால்... சீறும் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்!
தஞ்சை: மத்திய அரசின் விழாவுக்கு தன்னை அழைக்கத் தவறியமைக்காக உயரதிகாரிகள் வீடு தேடி வந்து மன்னிப்பு கேட்டதால் பிரச்சனையை பெரிதுபடுத்த விரும்பவில்லை எனக் கூறுகிறார் தஞ்சை எம்.பி. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.
Recommended Video
4 நாட்களுக்கு முன்னர் இந்திய உணவுக்கழகம் சார்பில் தஞ்சாவூரில் கண்காட்சி நடத்தப்பட்ட நிலையில், அந்த நிகழ்ச்சிக்கு தன்னை ஏன் அழைக்கவில்லை எனக் கேட்பதற்காக எஸ்.எஸ்.பி. நிகழ்விடத்துக்கே சென்றிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் நடந்தது என்ன என்பது பற்றி ஒன் இந்தியா தமிழிடம் அவர் பகிர்ந்து கொண்ட விவரம் பின்வருமாறு

தஞ்சாவூர்
''உணவுத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் இந்திய உணவு கழகம் சார்பில் தஞ்சாவூரில் கண்காட்சி தொடக்கவிழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு எனக்கு மற்றும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் என யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அழைப்பு கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, இது போன்ற ஒரு நிகழ்ச்சி நடக்கிறது என்ற தகவலை கூட மத்திய அரசு அதிகாரிகள் யாருக்கும் சொல்லவில்லை.''

அதிகாரிகள் விளக்கம்
''இதனால் தான் நான் விழா நடைபெற்ற இடத்துக்கே சென்று ஏன் எங்களை அழைக்கவில்லை, என்ன காரணம் எனக் கேட்டேன். தவறுதலாக விடுபட்டுவிட்டது என்றும், கொரோனா கால கட்டுப்பாடுகள் காரணமாக நிகழ்ச்சியை பெரிதாக நடத்தாததால் முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும் அங்கிருந்த மத்திய அரசு அலுவலர்கள் பதிலளித்தனர். இது தொடர்பாக மத்திய உணவுத்துறை அமைச்சரை தொடர்பு கொண்டு பேசலாம் என நினைத்திருந்தேன்.''

மன்னிப்பு
''ஆனால் அதற்குள் இந்திய உணவுக் கழகத்தின் மண்டல உயரதிகாரிகள் உட்பட சிலர் தவறுக்கு மன்னிக்குமாறு மன்னிப்பு கேட்டதால் இந்த பிரச்சனையை மேலும் பெரிதுபடுத்த விரும்பாமல் விட்டுவிட்டேன். நான் கேட்பது என்னவென்றால், இங்கிருக்க கூடிய எம்.பி., எம்.எல்.ஏ, கலெக்டர் என யாரையும் அழைக்காமல் டெல்லியிலிருக்கும் மத்திய அமைச்சருக்கு அழைப்பு விடுத்தது ஏன் என்பது தான். இதனால் தான் நான் நேரடியாகவே காரணம் அறிவதற்காக சென்றேன்'' எனக் கூறி முடித்தார்.

பாராட்டு
தமிழகத்திலுள்ள மத்திய அரசு அலுவலகங்களில் வடமாநிலத்தவர்கள் அதிகளவில் பணியமர்த்தப்படுவதால் தான் இது போன்ற நிலை உருவாவதாக தெரிவிக்கிறார்கள் தமிழ் ஆர்வலர்கள். இதனிடையே அழைக்காத இடத்திற்கு ஏன் செல்ல வேண்டும் என ஒதுங்கி நிற்காமல் ஏன் எங்களை அழைக்கவில்லை எனக் கேட்டு வட இந்திய அதிகாரிகளிடம் சண்டமாருதம் செய்த எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.












Click it and Unblock the Notifications