ப்பா..என்னா வெயிலு.. பைக் ஓட்டிய படியே இதமாக சாலையில் குளியல் போட்ட தஞ்சை இளைஞர்.. தூக்கிய போலீஸ்
தஞ்சாவூர்: கோடையில் தற்போது அடிக்கும் வெயிலுக்கு தண்ணீரில் குளியல் போட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். ஆனால் பைக்கில் செல்லும்போதுகூட ஒருவர் குளித்துக்கொண்டே செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடைக்காலம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வெப்பம் வாட்டி வதைக்கிறது. மக்கள் கோடை வெப்பத்தை தணிக்க பழச்சாறுகள், குளிர்ச்சியான ஆகாரங்களை சாப்பிட்டு வருகின்றனர். அதுவும் கடந்த சில தினங்களாக வெப்ப நிலை 100 டிகிரியை சர்வ சாதாரணமாக கடந்து பதிவாகிறது.

பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் புழுக்கம் காரணமாக மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். பகல் வேளையில் வெளியில் போகவேண்டும் என்றால் கண்டிப்பாக வியர்வையில் ஒரு குளியல் போடும் அளவுக்கு வெப்பம் தகிக்கிறது. இதனால், பலரும் வெயிலுக்குள் போக வேண்டும் என்றாலே ஒருமுறைக்கு பல முறை யோசிக்கும் அளவுக்கு வெப்பம் தகித்து வருகிறது.
இதனிடையே, தஞ்சாவூரில் ஒரு இளைஞர் பைக்கில் சென்ற படியே குளியல் போட்ட ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது. வெயிலின் உஷ்ணத்தை தணிக்க குளியல் போடுவது போல காட்டிக்கொள்ள்ளும் அந்த இளைஞர், பைக்கை ஓட்டிய படியே, முன்புறம் வைத்திருக்கும் பாத்திரத்தில் இருந்து தண்ணீரை ஒரு கப்பில் எடுத்து தொட்ர்ந்து தலையில் ஊற்றிய படியே செல்கிறார்.
சில நேரங்களில் இரு கைகளையும் விட்ட படி செல்வதும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது. சக வாகன ஓட்டி ஒருவர் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மே 14 ஆம் தேதி இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. பைக்கில் குளியல் போட்டு சாகசம் செய்த படி பயணித்த இளைஞர் பெயர் அருனாசலம் என்பது தெரியவந்தது.

வாட்டி வதைக்கும் வெயிலில் மக்கள் படும் அவஸ்தையை உணர்த்தும் வகையில் ஜாலியாக வீடியோ போட்ட அருணாசலம் கடைசியில் போலீசிடம் சிக்கினார். இளைஞர் அருணாசலத்தின் செயல் முற்றிலும் போக்குவரத்து விதி மீறல் என்பதால் அவருக்கு ரூ.2 ஆயிரம் அபராதத்தையும் விதித்தனர்.
அருணாசலம் குளித்தபடி செல்லும் வீடியோவை செல்போனில் பதிவு செய்தது அவரது நண்பர் பிரசன்னா என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பிரசன்னாவிற்கும் மோட்டார் வாகன சட்ட விதிகளின் படி ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.












Click it and Unblock the Notifications