தலையில் அடித்துக்கொண்டு அழுத தாய்.. தஞ்சாவூரில் இப்படியா நடக்கனும்! சோகத்தில் மூழ்கிய கிராமம்
தஞ்சாவூர்: மேட்டூர் அணையிலிருந்து நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் டெல்டா மாவட்டங்களில் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. நீர் நிலைகளை மக்கள் கவனமாக அணுக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கும் நிலையில், தஞ்சையில் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டத்தின் திருவேங்கட உடையான்பட்டியின் கீழத்தெருவை சேர்ந்த பள்ளி மாணவர்கள் மூன்று பேர் நேற்று மாலை வீடு திரும்பவில்லை. மூன்று மாணவர்களில் ஜஸ்வந்த் எனும் மாணவர் 8ம் வகுப்பும், பாலமுருகன் மற்றும் மாதவன் ஆகிய மாணவர்கள் 5ம் வகுப்பும் படித்து வந்திருந்தனர். இவர்கள் மூவரும் ஒன்றாக பள்ளிக்கு சென்று வீடு திரும்பி வந்திருக்கின்றனர்.

ஆனால் நேற்று நீண்ட நேரம் ஆகியும் பள்ளியிலிருந்து மாணவர்கள் வீடு திரும்பவில்லை. எனவே அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர். எனவே போலீசிலும் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் கிராமத்தினருடன் சேர்ந்து போலீசாரும் மாணவர்களை தேடியுள்ளனர். அப்போதுதான் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள குளத்தின் அருகே மாணவர்களின் புத்தக பை கிடந்திருக்கிறது. மட்டுமல்லாது மாணவர்களின் உடைகளும் அங்கே இருந்திருக்கிறது.
குளத்தில் நடத்தப்பட்ட தேடுதலில் மூன்று மாணவர்களும் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டிருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் நீர் நிலைகள் செழிப்பாக உள்ள பகுதிகளில் டெல்டா மாவட்டங்கள் மிக முக்கியமானவை. வட மாவட்டங்களின் முடிவிலும், தென் மாவட்டங்களின் தொடக்கத்திலும் இந்த மாவட்டங்கள் அமைந்திருக்கின்றன. இங்குள்ள நீர் நிலைகளில் ஆண்டின் பெரும்பாலான நாட்கள் தண்ணீர் இருக்கும். குறிப்பாக தென்மேற்கு பருவமழை காலங்களில் நீர் நிலைகள் முழு கொள்ளவை எட்டும்.
காரணம் இங்கு நெல் விவசாயம் பரவலாக இருக்கிறது. எனவே இந்த பகுதிக்கு பல நூறு ஆண்டுகளாக கர்நாடகாவிலிருந்து வரும் நீர் ஆதாரமாக இருக்கிறது. மேட்டூர் அணை கட்டிய பின்னர், ஆண்டுதோறும் ஜூன் மாதங்களில் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்படும். இந்த காலத்தில் கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக மழைப்பொழிவு இருக்கும். எனவே, கேஎஸ்ஆர் மற்றும் கபினி ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டும்.
இதனால் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர் ஒகேனக்கல் வழியாக சேலம் மேட்டூர் அணைக்கு வந்து சேரும். மேட்டூரில் நீரின் வரத்து அதிகரித்தால், அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படும்.
அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர் பல மாவட்டங்களுக்கு ஆதாரமாக அமைகிறது. குறிப்பாக நாமக்கல், ஈரோடு, கரூர் வழியாக திருச்சிக்கு வந்து சேருகிறது. இங்கிருந்து காவிரி நீர் இரண்டு பிரிவுகளாக பிரிந்து டெல்டா மாவட்டங்களுக்கு பயணிக்கிறது. போகிற வழியில் அனைத்து நீர் நிலைகளையும் இது நிரப்புகிறது.
திருச்சியிலிருந்து தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சில பகுதிகளில் மேட்டூர் நீர் பாய்கிறது. இந்த ஆண்டு ஜூன்.12ம் தேதி டெல்டா பாசனத்திற்கு மேட்டூரிலிருந்து நீர் திறக்கப்பட்டது. நீர் திறப்பு காரணமாக 11 மாவட்டங்களில் காவிரி கரையோரம் உள்ள ஊர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இப்படி இருக்கையில்தான் மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். திருவாரூரிலும் இதே போன்ற சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. திருவாரூர் மாவட்டம் லெட்சுமாங்குடி பகுதியில் ஓடும் ஆற்றில் முதியவர் ஒருவர் தவறி விழுந்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் அவரை தேடினர். ஆனால் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
இனி வரும் நாட்களில் பருவமழை தீவிரமடையும் என்பதால், குழந்தைகளை பெற்றோர் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பலரும் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications