தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.. திருத்தேரோட்டம் ரத்து
தஞ்சை: உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் 1000 ஆண்டுகள் மேல் பழமையானது, மாமன்னன் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயத்திற்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா தடை உத்தரவு காரணமாக விழா முழுவதும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது. முன்னதாக பிரம்மாண்ட கொடிமரத்திற்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னர் ரிஷிப சின்னம் பொறிக்கப்பட்ட கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று தமிழக அரசு திருவிழாக்கள் நடத்த கூடாது என தடை விதிக்கப்பட்ட நிலையில், பெரிய கோவிலில் சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயில் வளாகத்திலேயே நடைபெற உள்ளது,
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற 23ஆம் தேதி நடைபெற இருந்தது. தடை உத்தரவு காரணமாக திருத்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.