கல்யாணத்தில் கறி விருந்து.. விழாவை சிறப்பித்த மாப்பிள்ளை உட்பட 17 பேருக்கு கொரோனா தொற்று!
தஞ்சாவூர்: கல்யாணத்திற்கு பின் போடப்பட்ட கறி விருந்தில் பங்கேற்றவர்களுக்கு காய்ச்சல் மற்றும் உடல் நலக்குறைவு அடுத்தடுத்து ஏற்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்ற மாப்பிள்ளை உட்பட 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 35873 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 274629 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 448 பேர் பலியாகி உள்ளனர்.

தினசரி தொற்று பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழகம் முழுவதும் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு காணப்படுகிறது.
இந்த சூழலில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கூட்டம் கூட்டமாக மக்கள் திருமணம் மற்றும் இறப்பு போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கொரோனாவிற்கு ஆளாகிறார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் ராஜா என்பவருக்கு கடந்த 14ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, கடந்த 17ஆம் தேதி திருமண கறி விருந்து நடைபெற்றது. கறி விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு காய்ச்சல் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கறி விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனை முடிவில் புது மாப்பிள்ளை ராஜா உள்பட 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்டவர்கள் கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கேர் சென்டருக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications